கொடியேரி பாலகிருஷ்ணன் மறைவு – முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

103 0

கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளரான கொடியேரி பாலகிருஷ்ணன் (68), புற்றுநோய் பாதிப்பு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இதற்கிடையே, சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். கண்ணூர் நகரைச் சேர்ந்த கொடியேரி பாலகிருஷ்ணன் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக 15 ஆண்டு காலம் பதவி வகித்தவர். மேலும் கடந்த முறை 2006 – 2011 வரை அச்சுதானந்தன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசாங்கத்தில் உள்துறை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராக பதவி வகித்தார்.

அவரது உடல் இன்று மூன்று மணி அளவில் தலைச்சேரியில் உள்ள டவுன்ஹாலில் பொது மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படுகிறது. பின்னர் அரசு மரியாதைகளுடன் பையம்பலத்தில் உள்ள மயானத்தில் எரியூட்டப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் மருத்துவமனை சென்று கொடியேரி பாலகிருஷ்ணன் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.