பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் சசிகலா ஆஜராக தனி கோர்ட்டு தயார்

422 0

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் சசிகலா உள்பட 3 பேர் ஆஜராக தனி கோர்ட்டு தயாராக வைக்கப்பட்டுள்ளது.

சசிகலா மீதான சொத்து குவிப்பு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நேற்று பெங்களூரு ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து, தனி கோர்ட்டு கூறிய தீர்ப்பை உறுதி செய்து பரபரப்பு தீர்ப்பு கூறியுள்ளது.

அதோடு சசிகலா உள்பட 3 பேரும் விசாரணை கோர்ட்டில்(பெங்களூரு தனி கோர்ட்டில்) உடனே சரண் அடைய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதனை தொடர்ந்து குற்றவாளிகள் ஆஜராக வசதியாக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் உள்ள கூடுதல் சிட்டி சிவில் மற்றும் செசன்சு கோர்ட்டு கட்டிடத்தை சுத்தம் செய்யும் பணி நேற்று நடைபெற்றது.

ஏற்கனவே இந்த கோர்ட்டு அறையில் வைத்துதான் சொத்து குவிப்பு வழக்கை நீதிபதி குன்கா விசாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோர்ட்டு அறை தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே பெங்களூரு நகர 48வது சிட்டி சிவில் கோர்ட்டு நீதிபதி அஸ்வத் நாராயணா முன்னிலையில் சசிகலா உள்பட 3 பேரும் இன்று ஆஜராவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அவர்கள் கோர்ட்டில் ஆஜரானதும் வழக்கு தொடர்பான ஆவணங்களை நீதிபதி ஆய்வு செய்வார்.

அதைத்தொடர்ந்து அவருடைய உத்தரவின் பேரில் அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைப்பார்கள்.

நேற்று மாலை வரை பெங்களூரு கோர்ட்டு வளாகங்களில் எந்த பரபரப்பான சூழலும் இல்லை. இன்று பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் அதிக எண்ணிக்கையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.