நல்லெண்ண பயணமாக வங்காளதேச கடலோர பாதுகாப்பு படை கப்பல் சென்னை வருகை

359 0

நல்லெண்ண பயணமாக வங்காளதேச கடலோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான பி.சி.ஜி.எஸ். தாஜ்தீன் கப்பல் சென்னை துறைமுகத்துக்கு நேற்று வந்தது.
வங்காளதேச கடலோர காவல்படைக்கு சொந்தமான பி.சி.ஜி.எஸ்.தாஜ்தீன் பி.எல்.72 என்ற ரோந்து கப்பல் கடலோர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்த ரோந்து கப்பல் நல்லெண்ண பயணமாக சென்னை துறைமுகத்துக்கு நேற்று பகல் 2 மணி அளவில் வந்தது. இந்த கப்பலில் கேப்டன் தாரிக் தலைமையில் சுமார் 70 அதிகாரிகள் மற்றும் வீரர்கள் வந்தனர்.

இவர்களை தென்பிராந்திய கடலோர பாதுகாப்பு படை டி.ஐ.ஜி., சவுகான் தலைமையில் அதிகாரிகள் பாரம்பரிய முறைப்படி வரவேற்றனர். வங்காளதேச கடலோர பாதுகாப்புபடை அதிகாரிகள் வரும் 17-ந்தேதி காலை வரை சென்னையில் தங்கியிருந்து, இந்திய கடலோர காவல் படையினருடன் இணைந்து செயலாற்றும் வகையில் பல்வேறு பயிற்சிகள் உள்பட 5 நிகழ்வுகள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளனர். தென்பிராந்திய கடலோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான ரோந்து கப்பலான சமுத்திர பேகார்தார் கப்பலில் சென்று இருநாட்டு கடலோர காவல் படையினரும் பயிற்சியில் ஈடுபடுகின்றனர்.

கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம், தொலை ஆப்ரேட்டிங் நிலையம் (ஆர்.ஓ.எஸ்) உள்ளிட்டவற்றை வரும் 15-ந்தேதி சென்று பார்வையிட உள்ளனர். தொடர்ந்து இருநாட்டு கடலோர பாதுகாப்பு படையினரின் நட்பு ரீதியிலான கைப்பந்து போட்டி நாளை (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.

சென்னை வந்துள்ள வங்காளதேச கப்பலின் நீளம் 87 மீட்டர் (285 அடி), அகலம் 3.2 மீட்டர் (10 அடி), சுற்றளவு 10.5 மீட்டர் (34 அடி), உயரம் 5.5 மீட்டர் (18 அடி) கொண்டது. ஒரு மணி நேரத்தில் 25 கடல்மைல் தூரத்தை கடக்கும் சக்தி கொண்டது. இந்தக்கப்பல் கடந்த மாதம் 12-ந்தேதியில் இருந்து ரோந்துப்பணியில் ஈடுபட்டு வருகிறது.