யானை தாக்கி குடும்பஸ்தர் மரணம் – மடு பிரதேசத்தில் சம்பவம்

112 0

விறகு சேகரிப்பதற்காக வீட்டிலிருந்து சிறிது தூரம் காட்டுக்குள் சென்றவர் யானை தாக்கி ஸ்தலத்திலேயே உயிரிழந்த சம்பவம் மன்னார் மடுப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இவ் சம்பவம் வெள்ளிக்கிழமை (23) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

மடு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சின்னப்பண்டிவிரிச்சான் பகுதியில் வசித்து வந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான பபா என அழைக்கப்படும் கிறிஸ்தோப்பர் ஸ்ரான்லி (வயது 54) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு வீட்டில் இருந்து வெளியே சென்ற கணவர் மாலையாகியும் வீடு வராததால், மனைவி தேடிச் சென்றதாகவும் பின் அயலவர்களின் உதவியை நாடி காட்டுக்குள் சென்று தேடியபோது வீட்டிலிருந்து சுமார் ஐந்நூறு மீற்றர் தூரத்திலுள்ள காட்டுக்குள் யானையினால் தாக்கப்பட்ட நிலையில் கணவன் இறந்து கிடந்துள்ளார்.

இறந்தவரின் சடலம் மன்னார் பொது வைத்திசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டு மரண விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.