கொள்கைக்காக பயணிக்கும் போராளிகளின் தியாகத்தையும் அர்பணிப்பையும் கொச்சைப்படுத்தக் கூடாது

140 0

கொள்கைக்காக பயணிக்கும் போராளிகளின் அர்ப்பணிப்பையும், தியாகத்தை நாம் உட்பட எவரும் கொச்சைப்படுத்த முடியாது.

அந்த போராளிகளுக்கான மதிப்பை கொடுக்க தயாரல்லாத எவரும் எம் அமைப்பில் இருக்கவே முடியாது என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது தேச விடுதலைக்காக போராடிய போராளிகளை நாம் முன்னாள் போராளிகள் என கருதவில்லை. தமது கொள்கைக்காக நேர்மையாக பயணிக்கும் அவர்கள் போராளிகள் தான்.

அவர்கள் எம் பெருமதிப்புக்கு உரியவர்கள். அவர்களது அர்ப்பணிப்பையும், தியாகத்தை நாம் உட்பட எவரும் கொச்சைப்படுத்த முடியாது.

அந்த போராளிகளுக்கான மதிப்பை கொடுக்க தயாரல்லாத எவரும் எம் அமைப்பில் இருக்கவே முடியாது. அவர்கள் தமது வாழ்வையே, வாழ்க்கை முறையையே எமக்கு உதாராணமாக வாழ்ந்து காட்டியவர்கள்.

அவர்களை போற்றுவதும், மக்களுக்காக தம்மை அர்ப்பணித்த அவர்களை பராமரிப்பதும் எமது தேசத்தின் தலையாய கடமை என்றே நான் கருதுகின்றேன்.

ஆனால், எத்தனையோ உயிர் அர்ப்பணிப்புகளால் கட்டியெழுப்பப்பட்ட எமது தேசத்தின் கொள்கையை கைவிட்ட எவரும் தம்மை ‘ முன்னாள் போராளி ‘ எனும் அடையாளத்தை வைத்து கொண்டு மக்களை பிழையாக வழிநடத்த முடியாது.

அப்படியாயின் கருணா கூட தன்னை முன்னாள் போராளி என அழைத்து அந்த அடையாளத்தை காட்டி எம்மை பிழையாக வழிநடத்த முடியும். அதற்கு மக்கள் அனுமதிக்க கூடாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.