தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்டேஷன் வட்டகொட பகுதியிலுள்ள வடிகான் ஒன்றிலிருந்து இன்று சனிக்கிழமை (24) அதிகாலை 5.30 மணியளவில் நிறை மாத சிசு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த வீதியூடாக சென்ற சிலர் வடிகானில் சிசுவொன்று இருப்பதை அவதானித்த நிலையில், பொலிஸாருக்கு தகவலை வழங்கியுள்ளனர்.
பின்னர் சிசு பொலிஸாரினால் மீட்கப்பட்டு லிந்துலை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சிசுவை நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த சிசு உயிருடன் இருப்பதாகவும் வைத்தியசாலையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சிசு தொடர்பான மேலதிக விபரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என்றும் சம்பவம் தொடர்பான விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய தாய் இனம் காணப்பட்டுள்ளார். குறித்த நபர் திருமணமாகாத 21 வயதுடைய பெண் ஆவார்.
சிகிச்சைகளுக்காக குறித்த பெண்ணை தற்போது லிந்துலை பிரதேச வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கோட்டக்கலை பிரதேச பொது சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.