பகிடிவதையில் ஈடுபடும் மாணவர்கள் கருப்பு பட்டியலில் சேர்க்கப்படுவார்கள்!

94 0

பல்கலைக்கழகங்களில் புதிய மாணவர்களை பகிடிவதை செய்தமை நிரூபிக்கப்பட்ட மாணவர்கள் கருப்பு பட்டியலில் சேர்க்கப்படுவார்கள் என்று உயர்கல்வித்துறை இராஜாங்க அமைச்சர் சுரேந்திர ராகவன் தெரிவித்துள்ளார்.

இதன்படி, குற்றம் நிரூபிக்கப்படும் மாணவர்களை வகுப்புகளில் இருந்து தடை செய்யவும், பட்டங்களை இரத்து செய்யவும், உள்ளூர் பல்கலைக்கழகத்தில் படிக்க அனுமதிக்காமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் கூறினார்.

மேலும், அரச துறையில் பணியாற்ற முடியாத வகையில் அவர்களை கறுப்புப் பட்டியலில் சேர்க்க வழக்கறிஞர்களின் உதவியைப் பெறுவோம் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழகங்களில் புதிய மாணவர்களை பகிடிவதை செய்வது முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் எனவும், அதில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தற்போதைய சட்டங்களே போதுமானவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழகங்களில் இவ்வாறான நிகழ்வுகளை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு எதிராக தரம் பாராமல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஊடகங்களுக்கு பல்கலைக்கழகங்கள் திறந்திருக்க வேண்டும் எனவும் இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.