திருகோணமலையில் உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கின்மையை ஒழிப்பதற்கான நடவடிக்கை ஆரம்பம்

94 0

மாவட்டத்திலிருக்கக்கூடிய எந்தவொரு குடிமகனும் உணவில்லாமல் அதேபோன்று எந்தவொரு பிள்ளையும் போஷாக்கின்மையால் வாடக்கூடிய ஒரு நிலவரம் இல்லாமல் செய்யப்பட வேண்டும் என்று திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான பி.எச்.என் ஜயவிக்ரம தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியுடைய வழிகாட்டலின் கீழ் உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கின்மை ஒழித்தல் தொடர்பான 07 குழுக்கள் தேசிய ரீதியில் தற்போது உருவாக்கப்பட்டுள்ளன.இதனடிப்படையில் உணவுப் போஷாக்கு மற்றும் பாதுகாப்பு தொடர்பான மாவட்ட ஒருங்கிணைந்த குழு நேற்று முன்தினம்(22.09.2022) திருகோணமலை மாவட்டத்தில் ஸ்தாபிக்கப்பட்டதுடன் அதன் முதலாவது கூட்டம் மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்றுள்ளது.

தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,“கிராமிய ரீதியாக உருவாக்கப்பட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கு தொடர்பான குழு கிராமத்திலே உணவின்றி இருப்பவர்களது தகவல்கள் மற்றும் போஷாகின்மையால் பாதிக்கப்பட்டிருக்கும் சிறுவர்களது தகவல்களை கிரமமான முறையில் சேகரித்து அவர்களுக்குத் தேவையான வசதி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தல் வேண்டும். அவ்வாறானவர்கள் அற்ற ஒரு பிரதேசதத்தை உருவாக்க வேண்டிய பொறுப்பு அக் குழுக்களையே சாரும்.

எனவே அதற்கான வழிவகைகளை செய்து கொடுக்கவேண்டிய தேவை அந்தக் குழுக்களுக்கு காணப்படுகின்றது.எதிர்வருகின்ற வாரத்தில் மாவட்டத்தில் போஷக்கின்மையால் பாதிக்கப்பட்டிருக்கக் கூடிய சிறுவர்கள் மற்றும் உணவின்றி தவிக்கக் கூடிய குடும்பங்களுடைய விபரங்கள் சேகரிக்கப்படவுள்ளன.

இத்தகவல்கள் சேகரிக்கப்பட்டு உரிய பொறுப்பு வாய்ந்த நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதுடன் உரிய செயற்பாடுகளை கிராமிய மற்றும் பிரதேச செயலக குழுக்களும் ஏனைய பங்குதாரர்களை இணைத்து செயற்படல் வேண்டும்.

இதனடிப்படையில் அரச நிறுவனங்கள், தொடர்புப்பட்ட ஏனைய நிறுவனங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், சிவில் அமைப்புகள் என்பன இணைந்து இந்தப் பொறிமுறையை சிறப்பான முறையில் மேற்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.”என கூறியுள்ளார்.இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ் அருள்ராஜ், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி ) எஸ்.சுதாகரன், மாவட்ட செயலகத் திட்டமிடல் பணிப்பாளர் கே.விஜயதாசன், பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களுடைய பிரதிநிதிகள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்துகொண்டுள்ளனர்.