ஹிஜாப் அணிய மறுத்த பெண் செய்தியாளர் ; பேட்டி அளிக்க மறுத்த ஈரான் ஜனாதிபதி

80 0

ஹிஜாப் அணிய மறுத்த பெண் செய்தியாளருக்கு பேட்டி அளிக்க மறுத்த ஈரான் ஜனாதிபதி மறுப்பு தெரிவித்துள்ளார்.

ஈரானில் குர்திஸ்தான் மாகாணம் சஹிஸ் நகரை சேர்ந்த 22 வயதான மாஷா அமினி என்ற இளம்பெண் தனது குடும்பத்துடன் கடந்த 13 ஆம் திகதி தலைநகர் தெஹ்ரானுக்கு சென்றுள்ளார். அப்போது, ஈரானில் உடை தொடர்பான நெறிமுறைகளை கடுமையாக அமல்படுத்தும் நெறிமுறை பொலிஸார் மாஷா அமினி மற்றும் அவது குடும்பத்தினரை இடைமறித்துள்ளனர்.

மாஷா அமினி ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறி அவரை பொலிஸார் கைது செய்து கடுமையாக தாக்கியுள்ளனர். மாஷா அமினி தனது தலைபகுதியை ஹிஜாப்பால் முழுமையாக மறைக்கவில்லை என கூறி அவரை பொலிஸ் நிலையம் அழைத்து சென்று கடுமையாக தாக்கியுள்ளனர்.

பொலிஸார் தாக்கியதில் படுகாயமடைந்த மாஷா பொலிஸ் நிலையத்தில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாஷா அமினியை பரிசோதித்த வைத்தியர்கள் அவர் கோமா நிலைக்கு சென்றுவிட்டதாக அறிவித்தனர்.

கோமா நிலைக்கு சென்ற மாஷா அமினிக்கு கடந்த சில நாட்களாக தொடர்ந்து சிகிச்சை அளிக்கபட்டு வந்த நிலையில் அவர் கடந்த 17 ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஹிஜாப் சரியாக அணியாததால் பொலிஸார் தாக்கியதில் கோமா நிலைக்கு சென்ற இளம்பெண் மாஷா அமினி உயிரிழந்த சம்பவம் பெரும் ஈரானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், மாஷா மாரடைப்பு காரணமாக தான் உயிரிழந்ததாக ஈரான் பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஹிஜாப் சரியாக அணியாததால் பொலிஸார் தாக்கியதில் இளம்பெண் மாஷா அமினி உயிரிழந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து ஈரானின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது.

பெண்கள் தங்கள் ஹிஜாப்பை கழற்றி எறிந்தும், ஹிஜாப்பை தீ வைத்து எரித்தும், தங்கள் தலைமுடியை வெட்டியும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை ஒடுக்க பொலிஸார் எடுத்த நடவடிக்கையில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.

மேலும், பெண்களின் இந்த போராட்டத்தை ஒடுக்கும் நடவடிக்கையாக ஈரானில் சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஐ.நா. பொதுக்குழு கூட்டத்திற்கு பங்கேற்பதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி அமெரிக்காவுக்கு வந்துள்ளார். அமெரிக்கா வந்துள்ள ஈரான் ஜனாதிபதி ரைசியிடம் பேட்டி எடுக்க அமெரிக்காவின் பிரபல செய்தி நிறுவனமான சிஎன்என் திட்டமிட்டிருந்தது.

ஈரான் அதிபரிடம் சிஎன்என் செய்தி நிறுவனத்தின் மூத்த செய்தியாளர் கிறிஸ்டினா அமன்புர் பேட்டி எடுக்க திட்டமிட்டிருந்தார். ஆனால், பேட்டி எடுக்க வேண்டுமானால் செய்தியாளர் கிறிஸ்டினா ஹிஜாப் அணிய வேண்டும் என ஈரான் ஜனாதிபதி ரைசி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், தான் அமெரிக்காவில் இருப்பதாகவும் இங்கு ஹிஜாப் சட்டமில்லை என்றும் கிறிஸ்டினா தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து கிறிஸ்டினாவுக்கு பேட்டி அளிக்க ஈரான் அதிபர் மறுத்துவிட்டார். மேலும், அந்த நிகழ்ச்சியும் இரத்து செய்யப்பட்டுள்ளது.