ஆரம்ப பாடசாலைக்கு வருகை தரும் மாணவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

88 0

ஆரம்ப பாடசாலைக்கு வருகை தரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது.

இலங்கை ஆரம்ப பாடசாலை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் அசங்க சீறீநாத் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

நகரங்களை விட கிராமங்களில் இந்த நிலை அதிகம் காணப்படுகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொருளாதார நெருக்கடி காரணமாக பாடசாலை கட்டணத்தை செலுத்த முடியாத நிலையில் மாணவர்களின் பெற்றோர்கள் உள்ளதாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பல பெற்றோர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கான வழிவகைகளை இழந்துள்ளதுடன், அவர்களின் வருமானம் குறைவடைந்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

கடந்த சில மாதங்களாக ஆரம்ப பாடசாலைகளில் இணைந்து கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்து வருகின்றது.

குறிப்பாக 20 மாணவர்கள் கல்விகற்ற வகுப்புகளில் தற்போது 15 மாணவர்களே கல்வி பயில்கின்றனர்.

இதற்கு மேலதிகமாக கட்டணம் செலுத்த முடியாததால் சில மாணவர்கள் தங்கள் கற்றல் நடவடிக்கைகளை இடைநிறுத்திவிட்டனர் எனவும் இலங்கை ஆரம்ப பாடசாலை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் அசங்க சீறீநாத் தெரிவித்துள்ளார்.

ஆரம்ப பாடசாலைகளின் ஆசிரியர்கள் குறிப்பிட்ட கட்டணங்களை கேட்காத போதிலும் ஆசிரியர்களை எதிர்கொள்வதற்கான தயக்கம் காரணமாக பெற்றோர் ஆரம்பபாடசாலை மாணவர்களை பாடசாலைகளிற்கு அனுப்புவதை நிறுத்தியுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலை தொடர்ந்தால் இலங்கையின் கல்வி துறை பாதிப்புகளை எதிர்கொள்ளும் எனவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.