கூட்டுத் திட்டங்களை விரைவுபடுத்துவதற்கான வழிகள் குறித்து இந்தியா – இலங்கை பேச்சு!

84 0

இந்தியாவும் இலங்கையும் இரு நாடுகளுக்கும் இடையே முன்மொழியப்பட்ட கூட்டுத் திட்டங்களை விரைவுபடுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து விவாதித்துள்ளன.

பிரதமர் தினேஷ் குணவர்தன இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயுடன் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு குறித்து விரிவான கலந்துரையாடல்களை நடத்தினார்.

அலரிமாளிகையில் நேற்று (வியாழக்கிழமை) இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த சந்திப்பின்போது, ​​கடன் மறுசீரமைப்பு வசதிகளை விரிவுபடுத்தி, நிவாரணப் பொருட்கள், உணவு மற்றும் மருந்துகளை வழங்குவதன் மூலம் தற்போதைய பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள இந்தியா இலங்கைக்கு வழங்கிய உதவிகளுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.

சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின்சாரம், திருகோணமலை எண்ணெய் சேமிப்பு தொட்டிகள், துறைமுகங்கள், புகையிரதங்களின் கூட்டுத் திட்டங்கள், விவசாயம் மற்றும் மீன்பிடி அபிவிருத்திக்கான உதவிகள் உட்பட எரிசக்தி துறையில் அதிக இந்திய முதலீடுகளின் சாத்தியக்கூறுகள் குறித்து அவர்கள் இதன்போது விவாதித்தனர்.

இலங்கைக்கான பொருத்தமான சர்வதேச நாணய நிதியத் திட்டத்தைப் பெறுவதற்கு இந்தியா ஆதரவு அளித்ததற்கும் பிரதமர் நன்றி தெரிவித்தார்.

அபிவிருத்தியின் அனைத்து துறைகளிலும் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்காக பல்வேறு திறன்களில் பிரதமரின் வழிகாட்டுதலுக்காக இந்திய உயர்ஸ்தானிகர் நன்றி தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க மற்றும் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஆலோசகர் எல்டோஸ் மேத்யூஸ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.