பட்டினியால் மாணவர்கள் பாடசாலைகளில் மயக்கமடைந்து விழும் துயர நிலை தோற்றம் பெற்றுள்ளது. பிரச்சினையின் பாரதூரதன்மை தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தாமல் பொறுப்பற்ற வகையில் செயற்படுவதாக எதிர் மற்றும் சுயாதீன உறுப்பினர்கள் சுகாதார அமைச்சரை கடுமையாக சாடினார்கள்.
நாட்டில் பிரச்சினை உள்ளது என்பதை துறைசார்ந்த பொறுப்பான அமைச்சர் ஏற்றுக்கொள்ள வேண்டும், அதனை விடுத்து தான்தோன்றித்தனமாக செயற்பட கூடாது என சுயாதீனமாக உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா சுகாதாரத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவை கடுமையாக சாடினார்.
சபாநாயகர் தலைமையில் இன்று (22) வியாழக்கிமை இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் போது பாடசாலை மாணவர்கள் உணவு பற்றாக்குறை எதிர்கொண்டுள்ளமை தொடர்பில் எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் சுகாதாரத்துறை அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார்கள்.
அநுராதரம் மாவட்டத்தில் விலச்சி கல்வி வலயத்திற்குட்பட்ட 3 பாடசாலைகளில் கல்வி பயிலும் 20 மாணவர்கள் நேற்று முன்தினம் பட்டினியால் மயக்கமடைந்து விழுந்துள்ளார்கள் மறுபுறம் கம்பஹா மாவட்டத்தில் மினுவாங்கொட கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலையில் ஒரு மாணவி தனது பகலுணவுக்காக தேங்காய் துண்டுகளை பாடசாலைக்கு கொண்டு வந்துள்ளார்.
நாட்டில் இத்தன்மையே நிலவுகிறது.இதுவே உண்மை பாடசாலை மாணவர்களுக்கு 60 ரூபா போதாது.ஆகவே பாடசாலை மாணவர்களின் போசனை குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்துவதை விடுத்து பிரச்சினைகள் ஏதும் இல்லை, இல்லை என குறிப்பிட்டுக்கொண்டுள்ளது என அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.கே. குமாரசிறி குறிப்பிட்டார்.
இதன்போது எழுந்து பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல.அநுராதபுரம் மாவட்டத்தின் விலச்சி கல்வி வலயம் தொடர்பில் எனக்கு தெரியாது,மினுவாங்கொட விவகாரம் தொடர்பில் அந்த பாடசாலை அதிபருடன் தொலைபேசி ஊடாக உரையாடினேன்.அந்த பாடசாலையில் அவ்வாறான சம்பவம் இடம்பெறவில்லை என அவர் குறிப்பிட்டார்.
மினுவாங்கொட பாடசாலை அதிபருடன் தொலைபேசியில் உரையாடியதை பதிவு செய்துள்ளேன் என குறிப்பிட்ட சுகாதாரத்துறை அமைச்சர் அதிபருடன் இடம்பெற்ற உரையாடல் குரல் பதிவை இயக்கி அதனை ஒலிவாங்கி ஊடாக பகிரங்கப்படுத்தினார்.
‘அமைச்சரே உங்களின் செயற்பாடு தவறு’ என சபாநாயகர் சுகாதாரத்துறை அமைச்சரை நோக்கி குறிப்பிட்டார்.
இதன்போது குறுக்கிட்டு கருத்துரைத்த ஆளும் தரப்பின் பிரதம கொறடாவான பிரசன்ன ரணதுங்க, மினுவாங்கொட விவகாரம் தொடர்பில் நான் அந்த பாடசாலை யின் அதிபர் மற்றும் பிரதி அதிபருடன் உரையாடினேன். அவ்வாறான சம்பவம் இடம்பெறவில்லை என்றே அவர்கள் குறிப்பிட்டார்கள்.உணர்வுபூர்வமான விடயங்களை குறிப்பிட்டு நாட்டு மக்களை குழப்பும் நடவடிக்கைகளை ஒரு தரப்பினர் திட்டமிட்டு முன்னெடுக்கிறார்கள் என்றார்.
இதன்போது குறுக்கிட்ட சுயாதீன உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா,நாட்டில் பிரச்சினை உள்ளது என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.பாடசாலை மாணவர்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடி தொடர்பில் சுகாதாரத்துறை அமைச்சர் பொறுப்புடன் கவனம் செலுத்த வேண்டும் அதனை விடுத்து தான்தோன்றித்தனமாக செயற்பட கூடாது என கடுமையாக சாடினார்.
இதன்போது குறுக்கிட்ட சுயாதீன உறுப்பினர் டலஸ் அழகபெரும நாட்டில் 42 இலட்சம் பாடசாலை மாணவர்கள் உள்ளார்கள். அண்ணளவாக 11 இலட்சம் மாணவர்களுக்கு பகலுணவு வழங்கப்படும் .கடந்த இரண்டு வருடகாலமாக பாடசாலை மாணவர்களுக்கு பகலுணவு வழங்குவதில் தோல்வியடைந்துள்ளோம்.இதனையா அறிவியல் பூர்வமான அறிக்கை என்று குறிப்பிடுகின்றீர்கள் என்றார்.

