1000 ரூபா சம்பளத்தை வழங்குமாறு கோரி மஸ்கெலியாவில் தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

120 0

மஸ்கெலியா பெருந்தோட்ட கம்பனிக்கு சொந்தமான மஸ்கெலியா பிரவுன்ஸ்வீக் தோட்ட தொழிலாளர்கள் தங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட நாளாந்த சம்பளம் 1000 ரூபாயை உடனடியாக வழங்குமாறு கோரி இன்று (21.09.2022) தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாக எதிர்ப்பு கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

 

பிரவுன்ஸ்வீக் தேயிலைத் தோட்டங்களின் 07 பிரிவுகளைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள் கட்சி பேதமின்றி இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

 

 

இலங்கையில் 22 தோட்டக் கம்பனிகள் உள்ளதாகவும், அதில் மஸ்கெலியா பெருந்தோட்டக் கம்பனி மாத்திரம் ரூ.1000 கொடுப்பதில்லை எனவும் தெரிவித்தனர்.

அத்தோடு, நீதிமன்றத்தின் தீர்ப்பையும் மீறி தற்போது பொருளாதார நெருக்கடியால் தவிக்கும் தோட்டத் தொழிலாளர்களை மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனம் பாதாளத்திற்கு தள்ளியுள்ளது.

 

 

ஒரு கிலோகிராம் மாவின் தற்போதைய விலை ரூபா 400/- எனவும், மூன்று வேளை மாவு உணவை உண்ணும் தோட்டத் தொழிலாளர்கள் எவ்வாறு 200/- முதல் 300/- வரை சம்பளம் பெற்று வாழ்வார்கள் எனவும் தோட்டத் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

 

தோட்ட உரிமையாளர்களால் அங்கீகரிக்கப்பட்ட 1000 ரூபாவை மஸ்கெலியா பெருந்தோட்ட கம்பனிக்கு மாத்திரம் வழங்க முடியாவிட்டால் வேறு நிறுவனத்திடம் வழங்குமாறு கோரிக்கை விடுப்பதாகவும் தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டத்தை தொடரவுள்ளதாகவும் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

இந்தப் போராட்டத்தில் சுமார் 400 ற்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் கலந்துகொண்டதுடன், போராட்டத்தின் பின்னர் தோட்டத் தொழிலாளர்கள் வழமை போன்று தமது அன்றாட சேவைகளில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடதக்கது.