ரணிலுக்காக பிரதமர் பதவியை நிராகரித்ததைப் போன்றே மக்களுக்காக அமைச்சுப்பதவிகளையும் நிராகரிக்கின்றேன்!

174 0

நாட்டையும் , மக்களையும் , அரசியல் புரட்சிக்கு காரணமாகக் காணப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களையும் காட்டிக் கொடுக்கும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து எவரும் இந்த அரசாங்கத்தில் இணைய மாட்டார்கள்.

அன்று ரணில் விக்கிரமசிங்கவிற்கு துரோகமிழைக்கக் கூடாது என்பதற்காக பிரதமர் பதவியை நிராகரித்ததைப் போன்றே, இன்று நாட்டு மக்களுக்காக இந்த அரசாங்கத்துடன் இணையாமலிருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் கொலன்னாவ தொகுதி கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (18) இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில் ,

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் இம்முறை கூட்டத்தொடரில் சிவில் உரிமைகள், மனித உரிமைகள் மற்றும் அரசியல் உரிமைகளுக்கு முக்கியத்துவமளிப்பதைப் போன்று பொருளாதார உரிமைகளுக்கும் முக்கியத்துவமளிக்கப்பட்டுள்ளது.

இது மிக முக்கியமானதொரு விடயமாகும். சமூகத்தில் பொருளாதார உரிமைகளும் மக்களின் உயிர் வாழக் கூடிய உரிமைகளும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் அவர் தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் நாடு இந்தளவு வீழ்ச்சியடையக் காரணம் என்பதை இலங்கையைப் போன்றே சர்வதேசமும் ஏற்றுக் கொண்டுள்ளது.

தாம் எந்த தவறும் செய்யவில்லை எனில் , போராடும் மக்கள் மத்தியில் சென்று அவர்களது பிரச்சினைகளைக் கேட்டறியும் தைரியம் காணப்பட வேண்டும். ஆனால் இன்று எவருக்கும் அந்த தைரியம் இல்லை.

ராஜபக்ஷ அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பொதுஜன பெரமுனவின 134 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று , அவர்களைப் பாதுகாக்கும் செயற்பாடுகளில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஈடுபட்டுள்ளார்.

இவ்வாறான நிலையில் வெகுவிரைவில் உள்ளுராட்சி தேர்தல் இடம்பெறவுள்ளது. எந்த சந்தர்ப்பத்திலும் மக்களைக் காட்டிக் கொடுக்காத , நேர்மையாக செயற்படும் உறுப்பினர்களுக்கு மாத்திரமே ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடாக வேட்புமனு தாக்கல் செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும்.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியில் ஊழல் மோசடிக்காரர்கள் நிச்சயம் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர். நாட்டில் பல முக்கிய மாற்றங்கள் அவசியமாகின்றன.

பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதாகக் கூறி , அரச சொத்துக்களை தனியார் மயப்படுத்த இடமளிக்க முடியாது. மாறாக பொது மக்கள் இவற்றின் பங்குதாரர்களாக்கப்பட வேண்டும். இதன் மூலம் அவர்களும் முன்னேற்றமடைவதோடு , அரச சொத்துக்களை தனியார் துறையினருக்கு விற்பதையும் தவிர்க்க முடியும்.

சிறப்பாகக் காணப்பட்ட நாடு வீழ்ச்சியடைந்துள்ளது என்பது 2019 இல் பொறுந்துமா? அல்லது தற்போது பொறுந்துமா? இவ்வாறானதொரு சந்தர்ப்பத்திலேயே அமைச்சுப்பதவியை ஏற்குமாறு எம்மை கோருகின்றனர்.

தற்போதிருப்பதற்கும் மேலதிகமாக மேலும் 10 அமைச்சுக்களை நியமிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டையும் , மக்களையும் , அரசியல் புரட்சிக்கு காரணமாகக் காணப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களையும் காட்டிக் கொடுக்கும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து எவரும் இந்த அரசாங்கத்தில் இணைய மாட்டார்கள்.

எமது ஆட்சியில் ஒருபோதும் அரசியல் பழிவாங்கல்கள் இடம்பெறாது. ராஜபக்ஷ ஆட்சியில் இலட்சக்கணக்கானோர் அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளாகியுள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க , ராஜபக்ஷாக்களையும் பொதுஜன பெரமுனவினரையும் பாதுகாப்பவர் அல்ல என்பதை நிரூபிப்பதற்காக அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளாகியுள்ள அனைவருக்கும் நியாயம் வழங்குமாறு வலியுறுத்துகின்றோம்.

அவ்வாறில்லை எனில் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியமைத்து 24 மணித்தியாலங்களுக்குள் அவர்கள் அனைவருக்கும் நியாயம் வழங்கப்படும். தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் கடந்த 2018 ஆம் ஆண்டு இவ்வாறு அரசியல் பழிவாங்கலுக்கு உட்பட்டார் என்பதை நினைவுபடுத்த விரும்புகின்றேன்.

அன்று பிரதமர் பதவியை ஏற்குமாறு எனக்கு 71 சந்தர்ப்பங்களில் அழைப்பு விடுக்கப்பட்டது. எனினும் அன்று எனது கட்சி தலைவரான ரணில் விக்கிரமசிங்கவிற்கு துரோகமிழைக்கக் கூடாது என்பதற்காக அதனை நான் ஏற்கவில்லை. அதே போன்று தான் இன்று ஆர்ப்பாட்டக்காரர்களை காட்டிக் கொடுக்காமல் அமைச்சுப்பதவிகளை ஏற்காமலிருக்கின்றேன் என்றார்.