இலங்கை தொடர்பான தீர்மானம் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் பேரவையிடம் அமெரிக்க செனெட் சபை உறுப்பினர்கள் வலியுறுத்தல்

122 0

இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட 46/1 தீர்மானத்தின் ஊடாக ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு வழங்கப்பட்டுள்ள ஆணையை மேலும் 2 வருடங்களுக்கு நீடிப்பதுடன் இலங்கையில் பொறுப்புக்கூறலை நிலைநாட்டுவதற்கு அவசியமான வளங்களைத் தடையின்றிப் பெற்றுக்கொடுப்பதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை நடவடிக்கை எடுக்கவேண்டுமென அமெரிக்க செனெட் சபை உறுப்பினர்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதுமாத்திரமன்றி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சியில் பொருளாதார ரீதியில் சாத்தியமற்ற பாரிய அபிவிருத்தி செயற்திட்டங்களை முன்னெடுப்பதற்காக சீனாவிடமிருந்து பல பில்லியன் டொலர்கள் கடன் பெறப்பட்டதாக அப்பிரேரணையில் சுட்டிக்காட்டியுள்ள அவர்கள், கடந்த 2019 ஆம் ஆண்டில் இலங்கை முகங்கொடுத்த பொருளாதார நெருக்கடியானது சீனாவின் ‘கடன்பொறி உத்தியின்’ ஓரங்கமாக வழங்கப்பட்ட மிதமிஞ்சிய கடன்களின் விளைவாகவே மேலும் தீவிரமடைந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

இலங்கை மக்களின் அமைதியான முறையிலான ஜனநாயக மற்றும் பொருளாதார ரீதியான அபிலாஷைகளுக்கான ஆதரவை வெளிப்படுத்தும் நோக்கில் அமெரிக்க செனெட் சபை உறுப்பினர்களான மெஹென்டெஸ், டேர்பின், லெஹி மற்றும் பூக்கர் ஆகியோர் இணைந்து இலங்கை தொடர்பில் சமர்ப்பித்துள்ள பிரேரணையிலேயே மேற்கண்டவாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. அப்பிரேரணையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:

இலங்கையில் இடம்பெற்ற பலதசாப்தகாலப்போரின் விளைவாக இலட்சக்கணக்கானோர் உயிரிழந்ததுடன் மேலும் பலர் காணாமல்போயினர். இருப்பினும் நீண்டகாலமாகத் தொடர்ந்த சமத்துவமின்மை உள்ளடங்கலாக அவ்வினப்பிரச்சினை தோற்றம் பெறுவதற்குரிய அடிப்படைக்காரணமாக அமைந்த விடயங்கள் இன்னமும் தீர்க்கப்படாமலேயே இருக்கின்றன. அதேவேளை கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதியாகப் பதவியேற்ற கோட்டாபய ராஜபக்ஷவின் கீழான ஆட்சிநிர்வாகம் ஊழல் மற்றும் ஒடுக்குமுறைகள் நிறைந்ததாகவும் வெளிப்படைத்தன்மை குறைந்ததாகவும் காணப்பட்டது.

அவரது ஆட்சியில் நாட்டின் பொதுச்சொத்துக்கள் மிகக்குறைந்தளவிலான வெளிப்படைத்தன்மையுடன் தனிப்பட்ட அரசியல் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட அதேவேளை, தவறான வழிநடத்தலுடன்கூடிய விவசாயக்கொள்கை அமுல்படுத்தப்பட்டதுடன் பொருளாதார ரீதியில் சாத்தியமற்ற பாரிய அபிவிருத்தி செயற்திட்டங்களை முன்னெடுப்பதற்காக சீனாவிடமிருந்து பல பில்லியன் டொலர்கள் கடன் பெறப்பட்டது.

கடந்த 2019 ஆம் ஆண்டில் இலங்கை முகங்கொடுத்த பொருளாதார நெருக்கடியானது சீனாவின் ‘கடன்பொறி உத்தியின்’ ஓரங்கமாக வழங்கப்பட்ட மிதமிஞ்சிய கடன்களின் விளைவாகவே மேலும் தீவிரமடைந்தது.

அதனையடுத்து நாடளாவிய ரீதியில் பொதுமக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு வெளிப்படுத்திய கடும் எதிர்ப்பின் விளைவாக கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியதுடன் பாராளுமன்றத்தின் ஊடாக புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவுசெய்யப்பட்டார்.

இருப்பினும் ஊழல்மோசடிகள் குறித்த நம்பத்தகுந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வெளிப்படையானதும் சுயாதீனமானதுமான விசாரணைகளை ஆரம்பித்தல் உள்ளடங்கலாக மக்களின் கரிசனைகளுக்கு ஏற்றவாறு செயற்படுவதற்குத் தற்போதைய அரசாங்கம் தவறிவிட்டது. அத்தோடு அரசியல் ரீதியான தமது எதிர்ப்பை அமைதியான முறையில் வெளிப்படுத்துவோரை இலக்குவைப்பதற்கு அரசாங்கம் பயங்கரவாத்தடைச்சட்டத்தைப் பயன்படுத்திவருகின்றது.

இவ்வாறானதொரு பின்னணியில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடரில் இலங்கையின் மனித உரிமைகள், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க நிலைவரம் தொடர்பில் ஆராயப்படும் நிலையில், அமெரிக்க செனெட் சபையானது இலங்கை மக்களின் அமைதியான முறையிலான ஜனநாயக மற்றும் பொருளாதார ரீதியான அபிலாஷைகளுக்கு ஆதரவளிக்கும். அதேபோன்று அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபடுவதற்கான உரிமை உள்ளடங்கலாக இலங்கையர்களின் சட்டரீதியான உரிமைகளுக்கு மதிப்பளிக்குமாறு பாதுகாப்புத்தரப்பினரையும் தமிழ், முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து சிறுபான்மையின மக்களின் சார்பிலும் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து செயற்பாடுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவையும் வலியுறுத்துகின்றோம்.

அதேபோன்று சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க உதவித்திட்டம், சர்வதேச நாணய நிதியம், இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள உதவிகளைப் பாராட்டுகின்றோம்.

மேலும் கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரால் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு ஐ.நா மனித உரிமைகள் பேரவையையும் இலங்கை அரசாங்கத்தையும் வலியுறுத்துவதுடன், 46ஃ1 தீர்மானத்தின் ஊடாக ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு வழங்கப்பட்டுள்ள ஆணையை மேலும் 2 வருடங்களுக்கு நீடித்து, இலங்கையில் பொறுப்புக்கூறலை நிலைநாட்டுவதற்கான செயற்திட்டத்திற்கு அவசியமான வளங்களை வழங்குமாறு மனித உரிமைகள் பேரவையிடம் கேட்டுக்கொள்கின்றோம் என அப்பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.