பிலக்குடியிருப்பு மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்(காணொளி)

301 0

முல்லைத்தீவு கேப்பாப்பிலவு பிலக்குடியிருப்பு மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வடக்கு மாகாண சபையால் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இன்றையதினம் வடக்கு மாகாண சபையில் அவைத்தலைவர் தலைமையில் ஒன்றுகூடிய மாகாண சபை உறுப்பினர்கள், கல்வி அமைச்சர் குருகுலராசா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் பிலக்குடியிருப்பு மக்களின் 14 நாட்கள் போராட்டத்திற்கு முடிவு காணப்பட வேண்டும் என அரசாங்கத்தை கேட்டுக்கொள்வதென தீர்மானிக்கப்பட்டு சகலராலும் கையொப்பமிடப்பட்ட கடிதம் அவைத்தலைவரினால் அரசாங்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் பிலக்குடியிருப்பு பேராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் எனக் கோரும் கடிதம் இன்றையதினம் ஜனாதிபதி மைத்திபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண ஆளுநர் றெயினோல்ட் கூரேக்கு பிரதியிடப்பட்ட கடிதம் வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானத்தால் பிற்பகல் 2 மணியளவில் நேரடியாகக் கையளிக்கப்பட்டது.

அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் தொடர்பாக வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் இவ்வாறு தெரிவித்தார்.