அரசியல் கைதிகள் தொடர்பிலான விபரங்களை தனக்கு தருமாறு கோரிக்கை விடுத்துள்ள விக்னேஸ்வரன்

193 0

அரசியல் கைதிகள் ஒவ்வொருவரும் எந்தெந்தக் குற்றச் சாட்டுக்கள் சம்பந்தமாக தண்டனை அனுபவிக்கின்றார்கள் என்ற விபரங்களை எடுத்துத் தாருங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளைச் சந்திக்கச் செல்லும் உறவினர்களுடனான கலந்துரையாடல் நேற்று (10) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற போது இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

உங்கள் பயணம் எமது தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஒரு பிரகாசமான எதிர்காலத்தைக் கொடுப்பதாக இருக்க வேண்டுமென நான் வாழ்த்துகின்றேன்.

எனினும் இவர்களுக்கு நன்மைகள் உடனேயே கிடைத்து விடும் என்று எண்ணுவதைத் தவிருங்கள்.

இதன்போது ஜனாதிபதி, எமக்கு உத்தரவாதங்களையும், உறுதி மொழிகளையும் தந்தாலும் இவர் இன்னொரு இனச் சார்புடைய கட்சியின் ஆதரவை எதிர்பார்த்தே இருக்கின்றார் என்பதை தாங்கள் மறந்து விடலாகாது.

இந்த காரணத்தினால் நான் தங்களிடமிருந்து மூன்று விபரங்களை எதிர்பார்க்கின்றேன் என்பதைச் சொல்லி வைக்கின்றேன்.

ஒன்று, எமது சிறைக் கைதிகள் ஒவ்வொருவரிடமிருந்தும் அவர்கள் எந்தெந்தக் குற்றச்சாட்டுக்கள் சம்பந்தமாக தண்டனை அனுபவிக்கின்றார்கள் அல்லது இவர்களுக்கு எதிராக வழக்குகள் பதியப்பட்டுள்ளன அல்லது தடை உத்தரவு பெற்றுள்ளார்கள் என்ற விபரங்களை எடுத்துத் தாருங்கள்.

இரண்டு, தண்டனை பெறப்பட்டவர்களின் வழக்குகளில் எத்தனை பேர் வெறும் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் குற்றவாளிகளாக தண்டனை பெற்றுள்ளார்கள்.

எத்தனை பேர் குற்ற ஒப்புதல் வாக்கு மூலத்துடன் சேர்த்து வேறு சாட்சியங்களின் அடிப்படையிலும் குற்றவாளிகளாக ஆக்கப்பட்டுள்ளதோடு மற்றும் குற்ற ஒப்புதல் வாக்கு மூலங்களே இல்லாமல் வேறு சாட்சியங்களின் அடிப்படையில் குற்றவாளிகளாகக் காணப்பட்டுள்ளார்கள் என்ற விபரங்களை எடுத்துத் தாருங்கள்.

மூன்றாவதாக, சிறையில் வாடும் ஒவ்வொரு தமிழ் அரசியல் கைதியும் தற்போது என்னென்ன குறைகளை, குறைபாடுகளை, பாதிப்புக்களை எதிர்நோக்கி உள்ளார்கள் என்பன பற்றிய விபரங்கள்.

இந்த விபரங்களை முன்வைத்து நீதியமைச்சருடன் நான் பேச இருக்கின்றேன். ஆகவே கூடிய விரைவில் இந்த விபரங்களை எனக்கு எடுத்துத் தாருங்கள்.

கோமகன் போன்றவர்கள் இன்னொரு தகவலையும் எனக்குத் தர வேண்டும்.

அசோக டீ சில்வா அறிக்கையானது நான் எவ்வளவு தேடியும் எனக்குக் கிடைக்கவில்லை.

இதன் பிரதி எனக்கு வேண்டும். அதிலே கூறப்பட்டிருக்கும் 38 பேரும் கடந்த 2019ஆம் ஆண்டுக்குப் பின்னர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் என்று அறிகின்றேன்.

இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஒருவர் கூட நாம் கொடுத்திருக்கும் 46 பேர்களில் அடங்க மாட்டார்களா என்ற விபரம் தேவை. தற்போது இந்த 38 பேரை விடுவிக்கலாம் என்ற கருத்து அரச தரப்பினர் இடையே மேலோங்கி நிற்பதாக அறிகின்றேன்.

அப்படியானால் பல வருட காலங்கள் சிறையில் வாடும் 46 பேருக்கும் எந்த வித நன்மைகளும் கிடைக்காமல் போய்விடுமா, இது பற்றி பேசுவதானால் மேற்குறிப்பிட்ட அசோக டீ சில்வா அறிக்கை என் கைகளுக்குக் கிடைக்க வேண்டும்.

கோமகன் போன்றவர்கள் அதற்கான உதவிகளைச் செய்வார்கள் என்று எதிர்பார்க்கின்றேன்.

நீங்கள் யாவரும் இன்று பாதுகாப்பாக கொழும்பு சென்று தங்கள் உற்றார் உறவினரைப் பார்த்து வர, இறைவன் தாங்கள் ஒவ்வொருவருக்கும் நல்லாசி வழங்குவாராக, அன்புடன் தாங்கள் யாவருக்கும் விடை கூறி அனுப்புகின்றேன் என தெரிவித்துள்ளார்.