இலங்கை ரணிலால் பொதுமக்களை அச்சுறுத்த முடியாது – அனுர

217 0

அரசாங்கத்திற்கு எதிராக எழும் போராட்டக்காரர்களை அச்சுறுத்தும் அளவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இளமையானவர் இல்லை என ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

அடக்குமுறை மூலம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பதவியை தக்கவைத்துக் கொள்ள முடியாது என்றும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.

ஊழல் ஆட்சியின் தலையை அகற்றிவிட்டபோதும் அவரைப் போன்றே மக்கள் ஆணை இழந்தவர்களின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க ஊழல் அரசாங்கத்திற்கு முட்டுக் கொடுக்கிறார் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

நூறாயிரக்கணக்கான மக்களைக் கொண்ட ஒரு அமைப்பு மாற்றத்தைக் கோருகின்ற நிலையில் 134 எம்.பி.க்களா அல்லது மக்களா வெற்றி பெறுவார்கள் என்பதை காலம் காட்டும் என்றும் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

ரணிலை ஜனாதிபதியாக தாம் அங்கீகரிக்கவில்லை என்றும் ஆகவே அவர் அவர் பதவி விலகி புதிய அரசாங்கத்தை மக்கள் தெரிவு செய்ய நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டும் என்றும் அனுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தினார்.