புவிசார் குறியீடு பெற்ற தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்த பொருட்களின் கண்காட்சி-விற்பனை சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் 3 நாட்கள் நடக்கிறது. இதை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கிவைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தின் 43 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்திருக்கிறது. அதில் 10 பொருட்கள் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்தவை. தஞ்சாவூர் நாதஸ்வரம், நாச்சியார்கோவில் விளக்கு, ஓவியம், தலையாட்டிப் பொம்மை உள்பட 10 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்து இருக்கிறது. நாம் தயாரிக்கும் பொருட்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் வகையில் இந்த புவிசார் குறியீட்டை பெறுகிறோம்.
புவிசார் குறியீடு தலைமை அலுவலகம் சென்னையில்தான் இருக்கிறது என்றாலும், நாம் குறைவான அளவிலேயே விண்ணப்பித்து இருக்கிறோம். முதல்-அமைச்சரின் உத்தரவின்படி, இன்னும் 24 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கு விண்ணப்பித்துள்ளோம்.
நம்முடைய பண்பாடு, கலாசாரத்தை மற்றவர்களும் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும். ‘மாப்பிள்ளை சம்பா’ அரிசிக்கு புவிசார் குறியீடு பெற வேண்டும் என்று கூறியிருக்கின்றனர்.
அதை முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று, முயற்சி செய்வோம். பள்ளிக்கல்வித்துறை சார்பில், புவிசார் குறியீடு பெற்ற பொருட்களை மாணவர்கள் அறிந்துகொள்ளும் வகையில் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படும். புத்தக கண்காட்சியிலும் தனி அரங்கு அமைத்து அவற்றை இடம்பெறச் செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

