பன்மைத்துவப் பயிற்சிப் பட்டறை

171 0

உள்ளுராட்சி மன்ற பெண் உறுப்பினர்கள் மற்றும் பெண் சமூகத் தலைவர்களுக்கான பன்மைத்துவம் மற்றும் ஒன்றிணைத்தல் பற்றிய முழுநாள் விழிப்புணர்வு பயிற்சிப் பட்டறை   கல்லடி கிரீன் காடன் ஹோட்டலில் நேற்று  (18) நடைபெற்றது.

இலங்கை சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட சர்வமத பேரவையினால் நடாத்தப்பட்ட இந்நிகழ்வு, சர்வமத பேரவையின் மாவட்ட இணைப்பாளர் ஆர்.மனோகரன் தலைமையில் நடைபெற்றது. தேசிய சமாதானப் பேரவையின் திட்ட முகாமையாளர் என். பாசுதேவன், சர்வமத பேரவையின் மாவட்ட உதவி இணைப்பாளர் எச்.ஏ.எம். ஹமீட் ஆகியோர் கலந்து கொண்டனர்

வீட்டில், சமூகத்தில், அரசியலில் மற்றும் நாட்டில் பன்மைத்துவம் மிளிர வேண்டுமானால் இன மத மொழி மற்றும் அரசியல் பேதமின்றி விட்டுக்கொடுப்பு மனப்பாங்கு வளர்ந்து மனிதம் பேணப்படவேண்டும்.

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 25 சதவீதமாக கோட்டா முறை பெண் பிரதிநிதித்துவம் உள்வாங்கப்பட்டதினால் இலங்கையில் 340 உள்ளுராட்சி மன்றங்களைக் கொண்ட 8,000 பேரில் 20 சதவீதமான பெண்கள் சுமார் 1,900 பேர் பிரதிநித்துவம் பெற்றுள்ளனர் என இந்நிகழ்வில் வளவாளராகக் கலந்து கொண்ட பேராதனைப் பல்கலைக் கழக அரசறிவியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி இரா ரமேஷ் தெரிவித்தார்.

92 சதவீதம் எழுத்தறிவு கொண்ட இலங்கையின் சனத்தொகையில் சுமார் 53 சதவீதம் கொண்ட பெண்களுக்கு அரசியலில் சமத்துவம் இன்றி காணப்படுவதாலும், நெருக்கடியை முகாமைத்துவம் செய்யும் ஆற்றல் பெண்களிம் காணப்படுவதால் மக்களின் எழுற்சிப் போராட்டங்கள் ஊடாக இலஞ்சம் மற்றும் ஊழலற்ற முற்போக்கு சிந்தனையுள்ள பெண் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டு மக்களுக்கு சேவையாற்ற முன்வரவேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 உள்ளூராட்சி மன்றங்களிலுமிருந்து தெரிவு செய்யப்பட்ட பெண் உறுப்பினர்கள் இப்பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டு உள்ளூராட்சி மட்டத்தில் பன்மைத்துவத்தைப் பாதிக்கும் காரணிகள், பன்மைத்துவத்தைக் கட்டியெழுப்புவதில் பெண்களின் வகிபாகம், உள்ளூராட்சி நிறுவனங்களின் பன்மைத்துவத்தை கட்டியெழுப்புவதில் பெண்களின் வகிபாகம் பற்றி அறிக்கைகள் பெறப்பட்டு தெளிவூட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.