நாடாளுமன்றத்தில் தமிழில் உரையாற்றுவதினை தவிர்க்கும் கூட்டமைப்பினர்! கு.திலீபன்

102 0

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழில் பெயரை வைத்துக்கொண்டு தமிழில் உரையாற்றுவதில்லை என வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத்தலைவரும், வன்னி நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது வடமாகாண ஆளுனர் தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

வடக்கு மாகாணத்திற்கு புதிய ஆளுனர் நியமிப்பது தொடர்பில் நான் கேள்விபடவில்லை.சிறிதரன் கடந்த முறை நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது வடமாகாண ஆளுனர் தமிழில் பெயரை வைத்துக் கொண்டு ஆங்கிலத்தில் உரையாற்றுவதாக ஒரு கருத்தை தெரிவித்திருந்தார்.

நான் அவரிடம் ஒரு விடயத்தை கேட்க விரும்புகின்றேன். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள தமிழில் பெயரைக் கொண்ட இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் தமிழில் உரையாற்றுவதில்லை. முதலில் அவர் அதனை திருத்த வேண்டும்.

பல அரசியல்வாதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தற்போதைய ஆளுனருடன் முரண்பாடுகள் இருக்கிறது. ஆனால் என்னைப் பொறுத்த வரை தற்போதைய வடமாகாண ஆளுனர் ஜீவன் தியாகராசா எமது மாவட்டம் தொடர்பாக சிறப்பாக செயற்படுகிறார்.

முன்னாள் ஆளுனர் சாள்ஸ் அவர்களுக்கு எமது மக்களது பிரச்சினைகள் தொடர்பில் 150 இற்கு மேல் கடிதம் எழுதினேன். இதுவரை எந்தவித பதிலும் அனுப்பியதில்லை. வேலையும் நடக்கவில்லை.

ஆனால் தற்போதைய ஆளுனருக்கு கடிதம் அனுப்பினால் பதில் வருகின்றது. வேலையும் நடக்கிறது. அதனால் நான் 50 இற்கு மேற்பட்ட நன்றிக் கடிதங்களை கூட அனுப்பியுள்ளேன். தற்போதைய ஆளுனர் சிறந்த முறையில் செயற்படுகின்றார் என்றும் தெரிவித்துள்ளார்.