மன்னார் நீதிமன்றத்தில் சான்றுப் பொருட்களை திருடிய பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட இருவர் கைது

114 0

மன்னார் நீதிமன்றத்தில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த சான்றுப் பொருட்கள் சிலவற்றை திருடிய குற்றச்சாட்டில், மன்னார் நீதிமன்றத்தில் கடமையில் இருந்த பொலிஸ்  உத்தியோகத்தர் மற்றும் காவலாளி ஆகிய இருவரையும் இன்று வியாழக்கிழமை(18) காலை மன்னார் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,

மன்னார்   நீதவான் நீதிமன்றில் சான்றுப் பொருட்களாக காணப்பட்ட ஒரு தொகுதி பொருட்களை  கடமையில் இருந்த பொலிஸ்   உத்தியோகத்தர் ஒருவர் மற்றும் காவலாளி ஆகிய இருவரும் திருடியுள்ளதாக மன்னார் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் இன்று வியாழக்கிழமை(18) காலை விரைந்து செயற்பட்ட மன்னார் பொலிஸார் மன்னார் நீதிமன்றத்தின்  காவலாளி தங்குமிட பகுதியை சோதனையிட்டுள்ளனர்.

இதன் போது திருடப்பட்ட சான்றுப் பொருட்களான ஒரு தொகுதி கேரள கஞ்சா பொதி, முந்திரிகை விதைகள், மீன்பிடி வலைகள் மற்றும் சட்டவிரோத மதுபானம் (கசிப்பு) ஆகியவற்றை மன்னார்  பொலிஸார் மீட்டுள்ளனர்.

இதன் போது குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்ட மன்னார் நீதிமன்றத்தில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர்  மற்றும் காவலாளி ஆகிய இருவரையும் மன்னார் பொலிஸார் கைது செய்தனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட குறித்த இருவரும் மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில், விசாரணைகளின் பின்னர் குறித்த இருவரும் மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட உள்ளமை குறிப்பிடத்தக்கது.