வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்பு குழு- இலுப்பைகடவையில் கவனயீர்ப்பு போராட்டம்

125 0

‘கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல்’ எனும் தொனிப் பொருளில் வடக்கு கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களில் நூறு (100) நாட்கள் நடைபெற உள்ள செயல் திட்டத்தின் 17 ஆவது நாள் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 17 ஆம் திகதி புதன்கிழமை காலை 10 மணி அளவில் மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இலுப்பைக்கடவை பகுதியில் இடம்பெற்றது.

 

வடக்கு- கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நூறு (100) நாட்கள் நடைபெற உள்ள  செயல் திட்டத்தின் 17 ஆவது நாள் போராட்டம் 17 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் யாட்சன் பிகிராடோ,  மன்னார் மாவட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் இணைப்பாளர் எஸ். திலீபன்  மற்றும் கிராம மட்ட அமைப்புகள் ,விவசாய, மீனவ சங்கங்கள்,பெண்கள் அமைப்புகள் , மாணவர் அமைப்புகள்,சிவில்  சமூக அமைப்புகள் மனித உரிமை ஆர்வலர்கள்,  மன்னார் மெசிடோ மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின்  பணியாளர்களும் கலந்து கொண்டார்கள்.

குறித்த செயல் திட்டத்தில் கலந்துகொண்ட பொது மக்களால் 100 நாள் செயற்திட்டத்திற்கான பொது மகஜர் வாசிக்கப்பட்டது.

அதே நேரம் போராட்டத்தில் கலந்து கொண்ட மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை பெறுவதற்கான தெளிவுபடுத்தல்கள் மற்றும் அரசியல் தீர்வு விடயத்தில் மக்களின் கருத்துக்கள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பாக கருத்துக்களும் உள் வாங்கப்பட்டது.

குறித்த போராட்டம் வடக்கு-கிழக்கு பகுதிகளில் தொடர்ச்சியாக சுழற்சி முறையில் 100 நாட்கள் வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.