69 இலட்சம் மக்களின் வாக்கை பெற்ற முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தன்னை நம்பிய மக்களை பட்டினி போட்டு வதைத்ததன் விளைவாக அவர்கள் இட்ட சாபமும், பாதிக்கப்பட்ட மக்களின் பிராத்தனையுமே அவர் இன்று ஓடியொளிந்துள்ளமைக்கு காரணமாக உள்ளதாக, கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் தெரிவித்தார்.
செஞ்சோலை படுகொலையின் நினைவு நாளையொட்டி, அம்பாறை – வீரகெட திஸ்ஸபுர பிரதேசத்தில் வறுமை கோட்டுக்கு கீழ் வசிக்கும் மக்களுக்கு ரெலோ சர்வதேச அமைப்பின் “நமக்காக நாம்” வேலைத்திட்டத்தின் கீழ், வீரகெட திஸ்ஸபுர ஸ்ரீ சுதர்சநாராம விகாரையில் வைத்து நேற்று முன்தினம் (14) உலருணவுகள் வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய அவர், “இலங்கையில் பிறந்த கோட்டாபய இலங்கையில் வாழ முடியாமல் இன்று அங்கும் இங்கும் அலைந்து திரிகின்றார். அவர் மக்களிடமிருந்து கொள்ளையடித்த மக்களின் பணத்தை மக்களுக்காக செலவழித்து விட்டு அவரது சொந்த நாட்டுக்கு வந்து வாழ வேண்டும்.
“அவரை யாருமே நாட்டை விட்டு ஓடும்படி கேட்கவில்லை. மாறாக அவரது ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்யும் படிதான் மக்கள் போராட்டம் நடத்தினார்கள்.
“அரசியல்வாதிகள் மக்களின் வரிப்பணத்தில் சொகுசாக வாழ்கிறார்கள். ஆனால், மக்கள் வரியையும் செலுத்திக்கொண்டு, வாக்களித்து விட்டு, வாழ்க்கையை தொலைத்துள்ளனர். இந்நிலை மாற கிராம மட்டத்திலிருந்து மாற்றம் வரவேண்டும்” என்றார்.

