தேசிய பாதுகாப்பு மற்றும் பொது மக்கள் பாதுகாப்பை கருத்திற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் அவசரகால சட்டம் எதிர்வரும் 27ஆம் திகதிக்கு பின்னர் தொடர்ந்து நீடித்துக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது.
ஏனெனில் அவசரகால சட்டம் கடந்த மாதம் 27ஆம் திகதி பாராளுமன்றத்தில் ஒரு மாத காலத்துக்கு அனுமதிக்கப்பட்டது.
அதன் பிரகாரம் எதிர்வரும் 27ஆம் திகதியுடன் ஒருமாத காலம் முடிவடைகிறது. அவசரகால சட்டத்தை மேலும் நீடிப்பதாக இருந்தால் ஒரு மாதகாலம் முடிவடைவதற்கு முன்னர் மீண்டும் பாராளுமன்றத்தில் அனுமதித்துக்கொள்ள வேண்டும்.
என்றாலும் பாராளுமன்றம் இறுதியாக கடந்த 12ஆம் திகதி கூடியபோது, எதிர்வரும் 29ஆம் திகதிவரை பாராளுமன்றம் சபாநாயகரால் ஒத்திவைக்கப்பட்டது.
அடுத்த பாராளுமன்ற கூட்டத்தை எதிர்வரும் 29ஆம் திகதி திங்கட்கிழமை கூட்டுவதற்கு கடந்த 10ஆம் திகதி இடம்பெற்ற பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழு கூட்டத்திலேயே தீர்மானிக்கப்பட்டிருந்தது.
அதன் பிரகாரம் அவசரகால சட்டம் அடுத்த மாதத்துக்கு நீடிக்க முடியாத நிலையே இருந்து வருகின்றது. அதனால் எதிர்வரும் 27ஆம் திகதிக்கு பின்னர் அவசரகால சட்டம் தானாக இரத்து செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

