அம்பாறை மாவட்ட ஆழ்கடல் மீனவர்களுக்கு எரிபொருள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக, கல்முனை ஆழ்கடல் மீனவ சங்கத்தின் தலைவர் எம்.ஏ.எம். நசீர், இன்று (14) தெரிவித்தார்.
இது தொடர்பாக அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
கடற்றொழிலாளர்கள் தனது தொழிலை மேற்கொள்வதற்கு தங்களுக்குத் தேவையான மண்ணெண்ணெய் மற்றும் டீசல் என்பவற்றை பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த பல மாதங்களாக நிலவி வருகின்ற எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கடற்றொழில் வெகுவாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இதனால் மீனவர்கள் வாழ்வாதாரம் இழந்து, நிர்க்கதியடைந்திருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எதிர்வரும் வாரம் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக மண்ணெண்ணெய் விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் முன்னுரிமை அடிப்படையில் மீனவர்களுக்கு மண்ணெண்ணெய் வழங்குவதற்கு மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மீன்பிடித் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஊடாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டுப்படுத்தப்பட்ட அளவில் எரிபொருள் விநியோகிக்காமல் மீனவர்களின் தேவைக்கு ஏற்ப எரிபொருளை வழங்குவதற்கு ஆவண செய்யுமாறு கேட்கப்பட்டுள்ளது.
இதேவேளை, எரிபொருள் பற்றாக்குறை காரணமாக ஆழ்கடல் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாததனால் என்றும் இல்லாதவாறு அம்பாறை மாவட்டத்தில் மீனுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதோடு, விலையும் அதிகரித்து காணப்படுகின்றது.

