ஒதுங்கி நிற்கும் தமிழ்த்தரப்பு

156 0

இலங்கையின் தற்போதைய நெருக்கடி  பற்றி செயலாற்றுபவர்கள் குறிப்பாக தமிழ்ச் செயற்பாட்டாளர்கள் இந்த நெருக்கடியை முதலில் கோட்பாட்டு ரீதியாக புரிந்து கொள்ள வேண்டும். இந்த நெருக்கடி என்பது பெருந்தேசியவாதத்தின் லிபரல் பிரிவு, பெருந்தேசியவாதத்தின் இனவாதப்பிரிவு, ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் குறிப்பாக  தமிழ் மக்கள், புவிசார் அரசியல்காரரான  இந்தியா, பூகோள அரசியல்காரர்களான சீனா, அமெரிக்கா என்பவற்றின் நலன்களுக்கிடையேயான மோதலின் விளைவாகும்.

எனவே இதற்கான தீர்வு இந்த நலன்கள் சந்திக்கின்ற புள்ளி தான். தீர்வு ஏதோ ஒரு வகையில் இதனுடன் சம்பந்தப்பட்ட தரப்புகளின் நலன்களை சமநிலைப்படுத்த வேண்டும். இங்கே சில தரப்புகளுக்கு மட்டும் சாதகமாக தீர்வு அமையுமாயின் ஒதுக்கப்பட்ட தரப்புக்கள் குழப்பங்களை விளைவிக்கவே முயற்சிக்கும். தற்போது அதுவே இடம் பெறுகின்றது.

ரணில் ஜனாதிபதியாக பதவியேற்றமை ஒரு சில தரப்புக்களை மட்டும் திருப்திப்படுத்தியுள்ளதே தவிர விவகாரத்துடன் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்புக்களையும் திருப்திப்படுத்தவில்லை. சீனாவின் கப்பல் வருகையும், அதனுடன் கூட பாகிஸ்தானின் கப்பல் வருகையும், சர்வகட்சி அரசாங்கம் அமைக்கும் முயற்சிகள் தோல்வியடையும் நிலை ஏற்பட்டுள்ளமையும் இதன் வெளிப்பாடுகளே.

தற்போதைய சூழலை மிக நுணுக்கமாக அவதானித்தால் இந்த நெருக்கடியுடன் சம்பந்தப்பட்ட தரப்புகள் அனைத்தும் நெருக்கடி மைதானத்தில் தங்கள் தங்கள் நலன்களிலிருந்து தீவிரமாக விளையாடுவதை அவதானிக்கலாம். இங்கே விளையாடாமலும், மைதானத்தின் பக்கம் செல்லாமலும் இருக்கின்ற ஒரேயொரு தரப்பு தமிழ்த்தரப்பு தான்.

தமிழ்த்தரப்பு இந்த நெருக்கடி மைதானத்தில் விளையாடாமல் ஒதுங்கி நிற்பதற்கு பிரதானமாக மூன்று காரணங்கள் இருக்கின்றன. அதில் முதலாவது 2009ஆம் ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கொழும்பை அனுசரித்துச் செல்லும் அரசியலை பின்பற்ற முனைந்தமையாகும்.

இரண்டாவது நெருக்கடி மைதானத்தில் தனித்தரப்பாக பங்கு கொள்ளக்கூடிய கௌரவமான பங்கு தமிழ்த்தரப்பிற்கு உண்டு என்பதை புரிந்து கொள்ளாமையாகும். மூன்றாவது தமிழ்த்தேசிய அரசியல் கட்சி அரசியலிடம் சிக்கிக்கொண்டமையாகும்.

தமிழின அரசியல் சேர்.பொன்.அருணாசலம் இலங்கைத்தேசிய காங்கிரசிலிருந்து வெளியேறி தமிழ் மாகாஜனசபையை ஆரம்பித்ததுடன் தொடக்கி வைக்கப்பட்டது.  கொழும்பை அனுசரிக்கும் அரசியல் மூலம் ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் சாதனை என்பது வடக்கு, கிழக்கில் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை பரந்தன் இரசாயனத்தொழிற்சாலை , வாழைச்சேனை காகிதத் தொழிற்சாலை என்பவற்றை உருவாக்கியமை மட்டும் தான். தற்போது அவையும் செயலற்றுக்கிடக்கின்றன.

மறுபக்கத்தில் இந்தக் காலத்தில் தான் தமிழர் தாயகத்தின் கூட்டிருப்பை சிதைக்கும் நிலப்பறிப்பு மேற் கொள்ளப்பட்டது அன்றைய மட்டக்களப்பு தெற்குப் பிரதேசத்தில் உருவாக்கப்பட்ட கல்லோயாத்திட்டம் சுதந்திரத்திற்கு பின்னரே நடைமுறைக்கு வந்தது. இதற்குப் புறம்பாக தாயகத்தின் மையமான திருகோணமலை மாவட்டத்தில் சிங்களக் குடியேற்றங்கள் முடுக்கி விடப்பட்டன.

உலகில் பின்பற்றப்படும் அனைத்து குடியேற்ற முறைகளும் அங்கு பரீட்சித்துப்பார்க்கப்பட்டன. இந்தக் குடியேற்றங்களைத் தடுக்க ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் அனுசரிப்பு அரசியலினால் சிறிது கூட முடியவில்லை.தொடர்ந்து 1956இல் தனிச்சிங்களச் சட்டம் அறிமுகமான பின் ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் ஆதிக்க அரசியல் முடிவுக்கு வந்தது.

1949ஆம் ஆண்டு மலையக மக்களின் பிரஜாவுரிமைப்பறிப்பு, ஜீ.ஜீ.யின் கொழும்பு அனுசரிப்பு அரசியல் என்பன காரணமாக தந்தை செல்வா தலைமையில் 1949டிசம்பரில் அகில இலங்கைத் தமிழரசுக் கட்சி உருவான போதும் 1956ஆம் ஆண்டு வரை ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் செல்வாக்கினை மீறி மேலெழ முடியவில்லை.

தமிழரசுக்கட்சியின் கூட்டங்கள் காங்கிரஸ்கட்சிக்காரர்களினால் கல்லெறிந்து குழப்பப்பட்டன. இந்த ஆதிக்கம் தனிச்சிங்களச் சட்டம் அறிமுகமானதுடன் கீழிறங்கியது. 1956ஆம் ஆண்டு தேர்தலில் அகில இலங்கைத்தமிழர்; காங்கிரஸ் ஒரு ஆசனத்தை மட்டும் பெற்று படுதோல்வியடைந்தது. இதன் பின்னர் இடம்பெற்ற காலி முகத்திடல் சத்தியாக்கிரக போராட்டம் (1956) திருமலை யாத்திரை (1956), ஸ்ரீ எதிர்ப்புப் போராட்டங்கள் (1957 – 1958), கச்சேரிகள் முன்னால் சத்தியாக்கிரக போராட்டம் (1961), என்பன தமிழரசுக்கட்சியின் ஆதிக்க நிலையை நிரந்தரமாக்கின. பண்டா – செல்வா ஒப்பந்தம் (1957), டட்லி – செல்வா ஒப்பந்தம் (1965) என்பன கைச்சாத்திடப்பட்டன. இதில் ஒரு ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்டது. மற்றைய ஒப்பந்தம் கிடப்பில் போடப்பட்டது என்பது வேறு கதை

1965ஆம் ஆண்டு தமிழரசுக்கட்சியும் அனுசரிப்பு அரசியலுக்கு சென்றது. ஆனாலும் அதற்கான நியாயப்பாடுகளை வலுவாக முன்வைத்தது. 1965ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட டட்லி – செல்வா ஒப்பந்தப்படி மாவட்ட சபைகளை நடைமுறைப்படுத்துவதற்காகவும், தமிழ் மொழி விசேடசட்டமூலத்தை  தாயகத்தில் நடைமுறைப்படுத்துவதற்காகவும், அனுசரிப்பு அரசியலின் அடுத்த கட்டமான பங்கேற்பு அரசியலை மேற்கொள்ளப்போவதாகக் கூறியது.

தலைமை மட்டத்தில் இருந்தவர்கள் எவரும் அமைச்சர் பதவியை ஏற்காமல் மு.திருச்செல்வம் அமைச்சர் பதவி ஏற்று உள்@ராட்சி அமைச்சரானார். இந்தப் பதவி நீண்ட காலம் நீடிக்கவில்லை. திருகோணமலை கோணேஸ்வரத்தை புனித பிரதேசமாக பிரகடனப்படுத்துவதை முதலில் ஆதரித்த பிரதமர் டட்லி சேனநாயக்கா சேருவல புத்த பிக்குவின் எதிர்ப்பைத் தொடர்ந்து திருச்செல்வத்திடம் கலந்துரையாடாமலே புனித பிரதேசத்திட்டத்தை நிறுத்தி வைத்தார்.

இதனால் ஏமாற்றமடைந்த மு.திருச்செல்வம் அமைச்சர் பதவியை 1968ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் 16இம் திகதி இராஜினமா செய்தார். இவர் இராஜினமா செய்தாலும் 1968ஆம் ஆண்டு இறுதியில் அனுசரிப்பு அரசியலிருந்து விலகியது.இந்த அனுசரிப்பு அரசியலில் சில நியாயங்கள் இருந்தாலும் இதுவே தமிழரசுக் கட்சியின் வீழ்ச்சியைக் காட்டி நின்றது.

கட்சி அரசியலில் வெறுப்படைந்த தமிழ் இளைஞர்கள் கட்சி அரசியலுக்கு வெளியே 1968ஆம் ஆண்டு ஈழத்தமிழர் இளைஞர் இயக்கம் என்ற அமைப்பினை உருவாக்கினர். சுமஷ்டி கோரிக்கையை கைவிட்டு தனிநாட்டு போராட்டத்தை முன்னெடுக்க முனைந்தனர். இந்த முயற்சி பின்னர் தமிழ் மாணவர் பேரவை (1970), தமிழ் இளைஞர் பேரவை (1973) , என்பவற்றினூடாக ஆயுதம் தாங்கிய விடுதலை இயக்கங்கள் என வரலாறு வளர்ச்சியடைந்தது.

இந்த அனுசரிப்பு அரசியலினால் 1970 தேர்தலில் தமிழரசுக்கட்சி பெரும் வீழ்ச்சியைக் கண்டது. அ.அமிர்தலிங்கம் தனது சொந்தத்தொகுதியான வட்டுக்கோட்டைத்தொகுதியில் தோல்வியடைந்திருந்தார். இந்த வீழ்ச்சியை 1972ஆம் ஆண்டு தமிழர் கூட்டணி உருவாக்கத்தின் மூலமே தற்காலிகமாக சரிசெய்து கொண்டது.

2009ஆம் ஆண்டு ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டதைத் தொடர்ந்து தலைமைக்கு வந்த சம்பந்தன் அனுசரிப்பு அரசியலை தந்திரோபாயமாக மேற்கொண்டார். இந்த அனுசரிப்பு அரசியலை 13வருடங்களாக அவர் மேற்கொண்ட போதும் அதன் அடுத்த கட்டமான பங்கேற்பு அரசியலுக்கு அவரால் செல்ல முடியவில்லை. 2015ஆம் ஆண்டு உருவான நல்லாட்சி காலத்தில் அனுசரிப்பு அரசியல் உச்ச நிலையில் இருந்தது. இதுவே 2019 தேர்தலில் கூட்டமைப்பின் வீழ்ச்சிக்கும் காரணமாகியது. இந்த அனுசரிப்பு அரசியலினால் தமிழ் மக்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை.

குறைந்த பட்சம் அரசியல் கைதிகளின் விடுதலை கூட சாத்தியமாகவில்லை. ஆக்கிரமிப்புக்களையும் தடுத்து நிறுத்த முடியவில்லை. சம்பந்தனுக்கு எதிர்க்கட்சித்தலைவர் பதவியும், கொழும்பில் சொகுசு வீடும், மட்டும் கிடைத்தது. அனுசரிப்பு அரசியலின் தொடர்ச்சியினால் ஆட்சி மாறிய போதும், எதிக்கட்சித்தலைவர் பதவி இல்லாமல்போனபோதும் சொகுசு வீடும் மட்டும் தொடர்ச்சியாக இருந்தது.

இந்த அனுசரிப்பு அரசியலால் தான் தற்போதைய நெருக்கடி மைதானத்தில் தமிழத்தரப்பு தனிக்கொடியுடன் விளையாட சந்தர்ப்பம் இருந்தபோதும் கூட்டமைப்பு ஒதுங்கி நிற்கின்றது. அனுசரிப்பு அரசியலின் தளபதியான சுமந்திரன் தமிழ்மக்களின் பிரதிநிதி என்பதிலிருந்து விலகிச்சிங்கள தேசத்தின் பிரதிநிதியாகவே மாறிவிட்டார்.

இதன் உச்ச நிலை தான் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் விலைபேசி விற்கும் நிலைக்கு கொண்டு சென்றது. 2019 தேர்தல் இவர்களுக்கு வலுவான பாடத்தை கற்பித்த போதும் அதிலிருந்து கற்றுக்கொள்ள இவர்கள் முயலவில்லை. தமிழ்த்தரப்பு ஒதுங்கி நிற்பதற்கான ஏனைய இரு காரணிகளையும் அடுத்த வாரம் பார்ப்போம்.

சி.அ.யோதிலிங்கம்