பாராளுமன்ற பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்பட்ட டிரோன் கெமரா ஆற்றில் வீழ்ந்தது

358 0

பாராளுமன்றத்தின் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்பட்ட டிரோன் கெமரா (Drone Camera) தியவன்ன ஆற்றில் வீழ்ந்ததில் சுமார் ஐம்பது இலட்சம் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விமானப்படை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

இவ்வாறு விபத்துக்குள்ளான டிரோன் கெமரா மீண்டும் பயன்படுத்த முடியாதளவுக்கு சேதமடைந்துள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான  இந்த டிரோன் கெமராவானது, கடந்த மாதம் 20 ஆம் திகதியன்று பாராளுமன்றத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக விமானப் படையினரால் ஈடுபடுத்தப்பட்டிருந்த வேளையில் திடீரென தியவன்னா ஓயாவில் விழுந்து விபத்துக்குள்ளானது.

பேட்டரி வலுவிழந்ததால் விபத்துக்குள்ளானதாக தற்போதைய விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

அப்போது, டிரோன் னெமராவை பத்திரமாக தரையிறக்க விமானப்படை வீரர்கள் எவ்வளவோ முயன்றபோதிலும் அது கைகூடாமல்  தோல்வியில் முடிந்ததாக தெரியவந்துள்ளது.

தியவன்னாவில் விபத்துக்குள்ளான குறித்த டிரோன் கெமராவை  கடற்படையின் ‘டைவிங்’ குழுவினரால் அண்மையில் மீட்கப்பட்டடிருந்தமை குறிப்பிடத்தக்கது.