புத்தளம் – ஆராச்சிக்கட்டுவ பல்லம பிரதான வீதியின் எலகல்பிட்டிய பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.
எலகல்பிட்டிய, அடிப்பல பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் நடந்த நேற்றிரவு ஆராச்சிக்கட்டுவ பகுதியை நோக்கிப் பயணித்த லொறியொன்றும், எதிர் திசையில் பயணம் செய்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த இளைஞனை அங்கிருந்தவர்கள் உடனடியாக சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுதித்த போதிலும் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் குறிப்பிட்டனர்.
உயிரிழந்த இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக சிலாபம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த விபத்துச் சம்பவம் தொட்பில் ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

