உணவுப் பொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரிக்கும்

105 0

மீண்டும் உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கக் கூடும் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

மின்கட்டண அதிகரிப்புடன், பல வகையான உணவு வகைகளின் விலைகளையும் உயர்த்துவதில் கடுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டியிருக்கும் எனவும் கூறினார்.

தயிர், ஐஸ் கட்டிகள், ஐஸ்கிரீம், குளிர்சாதனப் பெட்டிகளில் வைக்கப்படும் பானப் போத்தல்கள், கோழி இறைச்சி உள்ளிட்ட பல வகையான உணவு மற்றும் பானங்களின் விலை அதிகரிக்கும் என்றும், மின்சார சபை அதிகாரிகளுக்கு வழங்குவதற்காக மக்களிடம் பெரும் மின்சாரக் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் அசேல சம்பத் மேலும் தெரிவித்துள்ளார்.

மின்சார சபை அதிகாரிகளுக்கு தனியாரிடமிருந்து சொகுசு வாகனங்களை கொள்வனவு செய்வதற்கும், உப நிலையங்களுக்கான தனியார் கட்டிடங்களை வாடகை அடிப்படையில் பெற்றுக் கொடுப்பதற்கும் மின்சார சபை அதிகளவு பணம் செலவழிப்பதாக அசேல சம்பத் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை பருப்பு, சீனி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைவடைந்துள்ளதாக கூறப்பட்டாலும் உண்மையில் அவ்வாறு விலை குறையவில்லை எனவும், உணவகங்களில் உணவுப் பொருட்களின் விலைகள் மாறாமல் இருக்க வேண்டுமெனில் அந்த பொருட்களின் விலைகளை குறைக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.