நேற்று முன்தினம் (8) காலை கொட்டாஞ்சேனை- சென் பெனடிக் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் 1கோடி ரூபாய் பெறுமதியான நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
டைல்ஸ் வர்த்தகத்தில் ஈடுபடும் குறித்த வர்த்தகரின் வீட்டுக்குள் பொலிஸார் என கூறிக்கொண்டு உள்நுழைந்த இருவர், வீட்டு உரிமையாளரின் தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டி, அவரது கைகளுக்கு விலங்கிட்டு வீட்டை சோதனையிட வேண்டும் என தெரிவித்து வீட்டிலிருந்த பணம், நகைகளை கொள்ளையிட்டுள்ளனர்.
இதற்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைய, இதனுடன் தொடர்புடைய இரண்டு பெண்களும் இரண்டு ஆண்களும் நேற்று (9) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
வெலிகம்பிட்டிய மற்றும் ராகம பகுதிகளிலிருந்து கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து 854000 ரூபாய் பணமும் ஒரு தொகை தங்க நகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் நால்வரும் 29 மற்றும் 42 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும் இவர்கள் கந்தானை, ராகம மற்றும் வெலிகம்பிட்டிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் இன்று புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.