ஜனாதிபதி ரணில் தலைமையிலான அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவோம் – ரோஹித அபேகுணவர்தன

82 0

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவோம்.ஒரு காலத்தில் அரசியல் ரீதியில் குறிப்பிட்ட கருத்துக்கள் குறித்து தற்போது அவதானம் செலுத்த கூடாது என முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுவர்தன தெரிவித்தார்.

பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கும், பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்குமிடையில் நேற்று சனிக்கிழமை பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து ஊடகங்களுக்கு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பிரதமர் தினேஷ் குணவர்தனவின் பங்குப்பற்றலுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் சர்வக்கட்சி அரசாங்கம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு முழுமையான ஆதரவு வழங்குமாறு பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தமது கட்சியின் கொள்கைக்கு முன்னுரிமை வழங்கமால் நாடு குறித்து அவதானம் செலுத்தி சர்வக்கட்சி அரசாங்கத்தில் ஒன்றினைய வேண்டும் என அனைத்து அரசியல் கட்சிகளிடமும் வலியுறுத்தியுள்ளோம்.

கேள்வி- தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்ற உறுப்பினராகிய ரணில் விக்கிரமசிங்கவிற்கு பிரதமர் பதவியை வழங்கும் அளவிற்கு பொதுஜன பெரமுனவிற்கு மூளை கோளாறு இல்லை என ஆரம்பத்தில் குறிப்பிட்டீர்கள்,அந்த நிலைப்பாட்டில் இன்றும் இருக்கின்றீர்களா ?

பதில் -அரசியலில் ஒவ்வொரு காலத்திற்கு ஒவ்வொரு விடயம் குறிப்பிடப்படும், அன்று குறிப்பிட்ட விடயம் தொடர்பில் இன்று அவதானம் செலுத்த கூடாது. பொருளாதார நெருக்கடி அரசியல் நெருக்கடியாக தீவிரமடைந்ததை தொடர்ந்து அரசாங்கத்தை பொறுப்பேற்குமாறு எதிர்க்கட்சி உட்பட சகல தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

சவால்களை பொறுப்பேற்க எவரும் தைரியமாக முன்வராத நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்று சவால்களை வெற்றிக்கொள்ள சகல தரப்பினருக்கும் அழைப்பு விடுத்து, தற்போது அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கததிற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவோம் என்றார்.