புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்காக பாராளுமன்றில் நடைபெற்ற வாக்கெடுப்பின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களில் சிலர் வாக்களித்தனர் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பகிரங்கப்படுத்தியுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையிலான சந்திப்பு 03 ஆம் திகதி புதன்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றிருந்தது. இதன்போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். இதனையடுத்து சுமந்திரன், சித்தார்த்தன் ஆகியோர் பதிலுக்கு வினாக்களைத் தொடுத்து தர்க்கம் செய்திருந்தனர்.
அதன்போது இடம்பெற்ற சம்பாசனை வருமாறு,
சுமந்திரன்: எனது முடிவுரையில் சிறுவிடயத்தினைக் கூறி முடிகின்றேன். ஜனாதிபதி தெரிவின்போது நாங்கள் உங்களுக்கு வாக்களிக்கவில்லை. எனினும், தற்போது நீங்கள் ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள நிலையில் நாம் நீங்கள் தேசிய மற்றும் தமிழ் மக்களின் நலன்களின் அடிப்படையில் முன்னெடுக்கும் விடயங்களுக்கு ஆதரவளிப்போம்.
ஜனாதிபதி ரணில்: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களின் எனக்கு வாக்களிக்கவில்லை என்று கூற வேண்டாம். சிலர் எனக்கு வாக்களித்துள்ளனர்.
சுமந்திரன்: இல்லை, நாம் கூட்டமைப்பாக தீர்மானம் எடுத்து அதன்பிரகாரமே வாக்களிப்பில் கலந்துகொண்டோம். ஆகவே, எங்களின் தீர்மானத்தின் பிரகாரம் உங்களுக்கு எம்மில் யாரும் வாக்களிக்கவில்லை.
ஜனாதிபதி ரணில்: இல்லை, கூட்டமைப்பின் சில உறுப்பினர்கள் தமிழ் மக்களின் நலன்களினை அடிப்படையாகக் கொண்டு எனக்கு வாக்களித்தனர். அதனை என்னால் உறுதியாக கூற முடியும்.
சித்தார்த்தன்: நாங்கள் கூட்டமைப்பாக தீர்மானம் எடுத்து வாக்களித்துள்ள நிலையில், நீங்கள் எவ்வாறு எம்மில் சிலர் உங்களுக்கு வாக்களித்ததாக கூற முடியும். அத்துடன், ஜனாதிபதி தெரிவின்போது இரகசியமான வாக்கெடுப்பே நடைபெற்றுள்ளது. அவ்வாறிருக்கையில், யாருக்கு வாக்களிக்கப்பட்டது என்பதை நீங்கள் அறிவீர்களாக இருந்தால், நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பு தேர்தல் முறையே பிழையல்லவா?
ஜனாதிபதி ரணில்: அவ்வாறில்லை. எனக்கு உங்களின் உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர் என்பதை நன்கு அறிவேன். ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து எனக்கு வாக்களித்தவர்களின் பட்டியல் கூட என்னிடத்தில் உள்ளது. இந்த சம்பாசனையை சுமந்திரன் மற்றும் சித்தார்த்தன் ஆகியோர் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

