“இன்று வரை ஓய்வுக் கதவை நான் தட்டவில்லை. என்னால் பதவி விலக முடியும். ஆனால், ஓய்வுகான அவசியம் எனக்கு தற்போது ஏற்படவில்லை” என போப் பிரான்சிஸ் தெரிவித்திருக்கிறார்.
போப் பிரான்சிஸ் இந்த வாரம் தொடக்கத்தில் கனடாவுக்கு பயணம் சென்றார். அப்பயணத்தில் கனடாவில் பூர்விக பழங்குடி மக்களுக்கு எதிராக 19-ம் நூற்றாண்டில் கத்தோலிக்க தேவாலயங்களால் நடத்தப்பட்ட கொடூரக் குற்றங்களுக்கு போப் பிரான்சிஸ் தார்மிக மன்னிப்புக் கேட்டது உலக அளவில் பாராட்டப்பட்டது.
இந்த நிலையில், போப் பிரான்சிஸ் தனது வரலாற்று சிறப்புமிக்க கனடா பயணத்தை முடித்திருக்கிறார். பயணத்தின் முடிவில் போப் பிரான்சிஸ் பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்றார். அப்போது அவரது ஓய்வு குறித்தும், உடல் நலம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு போப் பிரான்சிஸ் அளித்த பதிலில், “இந்த கனடா பயணம் தீவிரமாகவும் ஆழமாகவும் இருந்தது. இன்று வரை ஓய்வுக் கதவை நான் தட்டவில்லை. என்னால் பதவி விலக முடியும். ஆனால், ஓய்வுக்கான அவசியம் தற்போது எனக்கு ஏற்படவில்லை.
உடல் நிலையை கருத்தில் கொண்டால் பதவி விலகுவது குறித்து பரிசீலிக்க வேண்டிய நேரம் விரைவில் வரக்கூடும். ஆனால், இப்போது இல்லை. இந்த வயதில் எனது முழுங்கால் வலியுடன் என்னால் தொடர்ந்து பயணிக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை. தேவாலயத்திற்கு தொடர்ந்து சேவை செய்ய நினைக்கிறேன். அதற்கு என்னை நான் ஆரோக்கியமாக வைத்து கொள்ள வேண்டும்” என்றார்.

