நியாயமான காரணம் எதுவுமின்றி விமானத்தில் பிரஜையொருவர் பலவந்தமாக கைது செய்யப்பட்டதன் விளைவுகள் பாரதூரமானவையாகவே அமையும்.
இவ்வாறான செயற்பாடுகள் சர்வதேசத்தின் மத்தியில் இலங்கை மீதுள்ள அதிருப்தியை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்தார் .
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் புதன்கிழமை (27) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
அவசர கால சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு, கைதுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அடிப்படை காரணம் எதுவுமின்றி விமானத்தில் செல்ல தயாராக இருந்த நபரை பலவந்தமாகக் கைது செய்துள்ளமை அடிப்படை மனித உரிமை மீறலாகும். இவ்வாறான செயற்பாடுகளால் இலங்கை மீது வெளிநாடுகளுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தி அதிகரித்துள்ளது.
காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்கப்பட்டதை விட , இந்த செயற்பாடு மூலம் ஏற்படவிருக்கும் பின் விளைவுகள் பாரதூரமானவையாகும்.
தற்போது மக்களின் செயற்பாடுகளை முடக்கும் வகையிலேயே எரிபொருள் விநியோகம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. வரையறுக்கப்பட்டளவில் எரிபொருளை விநியோகித்து மக்களின் அன்றாட செயற்பாடுகளை முடக்கும் நடவடிக்கைகளையே அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மக்களுக்கு பொறுப்புகூற வேண்டிய தேவை இல்லை என்ற அடிப்படையிலேயே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்.
நாட்டில் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கும் மனித உரிமை மீறல் செயற்பாடுகளால் சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகள் மேலும் தாமதமடையும். அதற்கமைய ஆகஸ்ட் 15 ஆம் திகதியின் பின்னர் எரிபொருள் இறக்குமதியில் கடும் நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும்.
நாட்டில் நிலவும் இவ்வாறான பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு விரைவில் பொதுத் தேர்தலை நடத்துவதாகும். தற்போதுள்ள நிலைமையில் , இந்த அரசாங்கத்தின் தலைமைத்துவத்தில் சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க முடியாது. அதில் எம்மால் பங்கேற்கவும் முடியாது. எனவே தான் தேர்தலை துரிதமாக நடத்துமாறு வலியுறுத்துகின்றோம் என்றார்.

