சிங்கள மக்களுக்கும் அவசரகாலச் சட்டம் பாதிப்பை ஏற்படுத்துமென நாம் குறிப்பிட்டது தற்போது நிரூபணமாகியுள்ளது – சாணக்கியன்

209 0

தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரச தலைவர்கள் இனியாவது அவதானம் செலுத்த வேண்டும். அவசரகால சட்டம் மற்றும் அதனுடனான கைது தமிழர்களுக்கு ஒன்றும் புதிதல்ல,அவசரகால சட்டம் சிங்கள மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என நாம் குறிப்பிட்டது தற்போது உண்மையாகியுள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றில் இ்ன்று புதின்கிழமை இடம்பெற்ற அவசரகால சட்டத்தின் மீதான விவாதத்தின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இலங்கை அரசியல் வரலாற்றில் தவறுகளை திருத்திக் கொள்ள அரசியல் தலைவர்களுக்கு பல சந்தர்ப்பம் கிடைத்த போதும் அவர்கள் அவற்றை முறையாக பயன்படுத்திக்கொள்ளவில்லை.தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு அதுவும் ஒரு காரணியாக காணப்படுகிறது.

தற்போதைய அரச தலைவர்கள் வரலாற்று ரீதியிலான தவறை திருத்திக்கொண்டு பொருளாதார முன்னேற்றம் குறித்து அவதானம் செலுத்த வேண்டும்.

தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொடுத்தால் பொருளாதார நெருக்கடிக்கு ஒருமித்த வகையில் தீர்வு காண முடியும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் விசேட பொருளாதார வலயங்களை ஸ்தாபித்தால் புலம்பெயர் அமைப்புக்களின் முதலீடுகளை சிறந்த முறையில் எம்மால் பெற்றுக்கொள்ள முடியும்.அதற்கு அடிப்படை பிரச்சினைகளுக்கு முறையான தீர்வு அவசியம்.

காணாமலாக்கபட்டோர் விவகாரம்,சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, காணி விடுவிப்பு, உட்பட அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்து அரச தலைவர்கள் விசேட அவதானம் செலுத்த வேண்டும்.

போராட்டத்தில் ஈடுப்பட்ட இளைஞர்கள் தற்போது செய்யப்படுகிறார்கள்.சிறந்த மாற்றத்திற்கான போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களையும்,போராட்டத்தில் ஈடுப்படுபவர்களையும் கைது செய்வதை விடுத்து மத்திய வங்கியினை கொள்கையடித்தவர்கள்,சீனி வரிஊடாக கொள்ளையடித்தவர்கள், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டிற்கும்,பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கும் தீ வைத்தவர்களை கைது செய்ய அவதானம் செலுத்துங்கள்.

அவசரகால சட்டம்,கைது,ஆகியவை தமிழ் மக்களுக்கு ஒன்றும் புதியதல்ல,போராட்டத்தில் ஈடுப்படுபவர்களை சட்டத்தின் ஊடாக அடக்குவதை விடுத்து அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற அவதானம் செலுத்த வேண்டும்.அரசியலமைப்பு ரீதியிலான மாற்றத்தை போராட்டகாரர்கள் எதிர்பார்க்கிறார்கள்.அவற்றை செயற்படுத்த அரசாங்கம் ஜனநாயக ரீதியில் செயற்பட வேண்டும் என்றார்.