சீனா வங்கியில் பணம் எடுக்க பொதுமக்களுக்கு தடை

173 0

சீனாவின் ஹெனான் பகுதியில் பேங்க் ஆப் சீனாவின் கிளை உள்ளது. இந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்கள் சேமிப்பு கணக்கில் இருந்து பணத்தை எடுக்க கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. பணத்தை எடுக்க பொது மக்கள் யாரையும் வங்கி நிர்வாகம் அனுமதிக்க வில்லை. இதனால் வாடிக்கையாளர்கள் பணத்தை திரும்ப பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.

இதன் காரணமாக ஏ.டி.எம்.களில் பணம் எடுக்க பொதுமக்கள் குவிந்தனர். ஏ.டி.எம். மையங்களில் கூட்டம் அலைமோதுகிறது. பணம் எடுக்க பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்து நிற்கின்றனர். இவர்கள் போராட்டத்தில் ஈடுபடாமல் இருக்கும் வகையில் பொதுமக்களை மிரட்டும் வகையில் சீனா ராணுவம் தெருக்களில் பீரங்கிகளை நிறுத்தி உள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

முதலீட்டாளர்களிடம் இருந்து வங்கியை காக்கும் வகையில் சீன அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் வாடிக்கையாளர்களுக்கு படிப்படியாக சேமிப்பு பணத்தை திரும்ப ஒப்படைக்கும் பணி நடந்து வருவதாக வங்கி நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

கடந்த 1989-ம் ஆண்டு சீனாவில் ஆட்சியாளர்களுக்கு எதிராக தியானன்மென் சதுக்கத்தில் மாணவர்கள் திரளாக திரண்டு போராட்டம் நடத்தினார்கள். இதனை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினார்கள். இதையடுத்து ராணுவத்தினர் அங்கு வரவழைக்கபட்டனர்.

நிலைமை மோசமானதை தொடர்ந்து மாணவர்கள் மீது ராணுவத்தினர் பீரங்கி தாக்குதல் நடத்தினார்கள். இதில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் இறந்தனர். சீனா வரலாற்றில் இந்த சம்பவம் ஒரு கரும்புள்ளியாக அமைந்தது. இதே போல தற்போது நெருக்கடியில் சிக்கியுள்ள அரசு வங்கிகளை காப்பதற்காக சீன அரசு பீரங்கிகளை நிறுத்தி இருப்பது 1989-ம் ஆண்டு நடந்த பீரங்கி தாக்குதலை நினைவு படுத்துவதாக உள்ளதாக பொது மக்கள் தெரிவித்து உள்ளனர்.