தாயகக் கோட்பாட்டின் அச்சாணியாக ‘மட்டு எழுக தமிழ்’ வெற்றி அமையட்டும்! – அனைத்துலக ஈழத் தமிழர் மக்களவை!

267 0

மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் ஒன்றிணைந்து தன்னுரிமைப் பிரகடனம் செய்யும் ‘மட்டு எழுக தமிழ்’ எழுச்சிப் பேரணியின் வெற்றியானது தாயகக் கோட்பாட்டின் அச்சாணியாகும்.தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் ‘தாயகம்-தேசியம்-தன்னாட்சி உரிமை’ ஆகிய மூலாதாரக கோட்பாட்டின் அடிப்படையில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை உலகினதும் சிங்கள தேசத்தினதும் கவனத்திற்கு எடுத்துச் சொல்வதற்கான எழுதலாகவே ‘எழுக தமிழ்’ எழுச்சிப் பேரணி நடத்தப்பட்டு வருகிறது.

பல்லாயிரம் மக்கள் பங்கேற்புடன் யாழ்.முற்றவெளியில் எழுச்சிப் பிரவாகம் எடுத்து நின்ற ‘எழுக தமிழ்’ பெப்-10 இல் மட்டக்களப்பு மாவட்டம் நாவற்குடா பகுதியில் உள்ள விவேகானந்தா விளையாட்டு மைதானத்தில் காலை 9 மணியளவில் நடைபெறவுள்ளது.ஈழத் தமிழர்களாகிய எமது சுதந்திர வாழ்வின் அடிப்படையாகத் திகழ்வது வடக்கு கிழக்கு இணைந்த எமது மரபுவழித் தாயகமே. அதனை கூறுபோட்டு எமது சுதந்திர வாழ்விற்கு வேட்டுவைக்கும் சிங்களத்தின் சதிக்கு அடிபணிவு அரசியல் செய்துவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களும் சில புலம்பெயர் செயற்பாட்டாளர்களும் உடந்தையாக செயல்பட்டு வருகின்றார்கள்.

சிங்களத்தினதும் தமிழின விரோதிகளினதும் இச்சதியை முறியடித்து சுதந்திர தமிழீழம் என்ற இலட்சியக் கனவு சுமந்து தமது இன்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களினதும் தோளோடு தோள் நின்று சாவடைந்த எமதருமை மக்களினதும் உயிர்த்தியாகத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் எழுக தமிழராய் ஒன்றிணைவது அத்தியாவசியமாகும்.இனம், மதம் கடந்து தமிழர்களாக நாம் ஒன்றிணையும் போதுதான் அரசியல் ரீதியில் பலம்பெற முடியும். யாழ் முற்றவெளி எழுக தமிழ் எழுச்சிப் பேரணி வெற்றியானது நல்லாட்சி அரசின் ஏமாற்று நாடகத்தை தோலுரித்து தொங்கவிட்டிருந்தது. மட்டக்களப்பு எழுக தமிழ் வெற்றியானது சிங்களத்தின் போலித்தனத்தனத்தை அம்பலப்படுத்துவதுடன் எமது தாயக கோட்பாட்டை மேலும் வலுவாக்கும்.

ஆகவே, எமது அன்பான மக்களே! ‘மட்டு எழுக தமிழ்’ எழுச்சிப் பேரணியில் இனம், மதம், பிரதேச வேறுபாடுகளை வேரறுத்து தமிழ்த் தேசியத்தின் பெயரில் அலைகடலெனத் திரண்டு தாயக கோட்பாட்டின் அச்சாணியாக இவ் ஒன்றுகூடலை மாபெரும் வெற்றிபெற வைக்குமாறு மண்ணுறங்கும் மாவீரர்களின் வேண்டுகையாக விடுக்கின்றோம்.

“இலட்சியத்தில் ஒன்றுபட்டு உறுதிபூண்ட மக்களே வரலாற்றைப் படைப்பார்கள்.” – தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்.

‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.’

அனைத்துலக ஈழத் தமிழர் மக்களவை!