குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள புதிய உத்தரவு

105 0

குருந்தூர் மலை விவகாரத்தில் பொலிஸார் பக்கச்சார்பாக செயற்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதோடு நீதிமன்ற உத்தரவை மீறி இராணுவ பாதுகாப்புடன் புனித பொருட்கள் பிரதிஷ்டை செய்ய முயற்சிசெய்யப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு பகுதியிலுள்ள குருந்தூர் மலையில் கடந்த 12 ஆம் திகதியன்று, புனித பொருட்கள் பிரதிஷ்டை செய்யவும், கபோக் கல்லினாலான புத்தர் சிலை ஒன்றினை அமைப்பதற்கும், அங்கு நீதிமன்ற கட்டளையை மீறி அமைக்கப்பட்டுள்ள விகாரையில் விசேட பௌத்த வழிபாடுகளை மேற்கொள்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டதை தொடர்ந்து அந்த முயற்சிகள் கைவிடப்பட்டிருந்தன. இதன் பின்னணியில் இரண்டு தரப்பினரையும் அந்த பகுதியில் இருந்து அகற்றிய பொலிஸார் அங்கு பாதுகாப்பு நடவடிக்கையில் இருக்கின்றனர்.

குறிப்பாக ஆரம்பகாலம் முதல் குறுந்தூர் மலைப்பகுதி இராணுவம் மற்றும் பொலிஸாரின் பூரண கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகிறது.

ஆதிசிவன் அய்யனார் ஆலயத்தினர் செல்ல தடைகள் ஏற்படுத்தப்பட்டு வருவதோடு பௌத்த மத துறவிகள் உள்ளிட்டவர்கள் சென்று தமது கட்டுமானங்கள் உள்ளிட்டவைகளை மேற்கொள்ள ஆதரவளித்து வருகின்றனர்.

குருந்தூர் மலை ஆதிசிவன் அய்யனார் ஆலய வளாகத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரை உள்ளிட்ட அனைத்து கட்டுமானங்களையும் அகற்றுமாறும், கட்டுமானங்களை அகற்றியவுடன் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும், ஆலயத்தினர் தங்களுடைய வழிபாடுகளை மேற்கொள்வதற்கு எந்த விதத்திலும் தடை விதிக்கக்கூடாது.

அத்துடன் இந்த இடத்தில் அமைதி குலைவினை ஏற்படுத்தாத வகையில் பொலிஸார் உரிய பாதுகாப்பினை வழங்க வேண்டும் எனவும் முல்லைதீவு நீதிமன்றம் கடந்த 14 ஆம் திகதி அன்று அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதன் பின்னணியில் இந்த வழக்கு தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய கட்டளையை நடைமுறைபடுத்துவதில் சிக்கல் இருப்பதாகவும் இதனை நடைமுறைப்படுத்தினால் இனங்களுக்கிடையில் குழப்ப நிலை தோன்றும் வாய்ப்பு இருப்பதாக முல்லைத்தீவு பொலிஸார் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் நகர்தல் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்ததையடுத்து நேற்றுமுந்தினம்(19) குறித்த வழக்கு மீண்டும் வழக்குக்கு வந்த நிலையில் இந்த வழக்கில் சட்டமா அதிபர் திணைக்கள பிரதி சொலிசிட ஜெனரல் மற்றும் தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் உள்ளிட்டவர்கள் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளனர்.

இதன்போது வாதிட்ட பிரதி சொலிசிட ஜெனரல் தமது கருத்தை தெரிவிக்கையில் “குருந்தூர்மலை ஒரு பௌத்த தொல்லியல் இடம் எனவும் அங்கே புதிய கட்டுமானங்கள் எவையும் இடம்பெறவில்லை.

மாறாக தொல்லியல் சட்டங்களுக்கு உட்பட்டு தொல்லியல் சின்னங்களை பராமரித்து பாதுகாக்கும் செயற்பாடே முன்னெடுக்கப்படுகின்றது. அய்யனார் ஆலயம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் நீதிமன்றை தவறாக வழிநடத்தி இந்த தீர்ப்பை பெற்றுள்ளது.

இந்த ஆலய விவகாரம் தொடர்பில் உச்ச நீதிமன்றில் இன்னொரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கு தொடர்பில் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவராது அய்யனார் ஆலய நிர்வாகம் சார்பில் வாதிட்ட சட்ட தரணிகள் நடந்துகொண்டுள்ளனர்”என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனி தொடர்ந்து அய்யனார் ஆலயம் சார்பில் வாதிட்ட மூத்த சட்டதரணி அன்ரன் புனிதநாயகம் உள்ளிட்ட சட்ட தரணிகள் குருந்தூர்மலையில் அமைக்கப்பட்டுவருவது புதிய கட்டுமானங்கள் தான் எனவும் தொல்லியல் சின்னங்களை பாதுகாக்கின்றோம் என்ற போர்வையில் புதிய கட்டுமானங்களை அமைத்துள்ளதாகவும் அதற்கான ஆதாரங்களை ஏற்கனவே மன்றின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இந்த கட்டுமானங்கள் ஏற்கனவே நீதிமன்றம் 2018 இல் வழங்கிய கட்டளையை மீறி அமைக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிகாட்டியதோடு குருந்தூர் மலைக்கு நேரடியாக சென்று இடம்பெறும் புதிய கட்டுமானத்தை கௌரவ மன்று மற்றும் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் நேரில் சென்று பார்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

இதற்கிணங்க வழக்கு விசாரணைகள் இடைநிறுத்தப்பட்டு நீதவான் மற்றும் சட்டமா திணைக்கள அதிகாரிகள், சட்டதரணிகள் ஆகியோர் கட்டுமானம் இடம்பெறும் குருந்தூர் மலைக்கு கள விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

இதனையடுத்து அங்கு நடைபெறும் செயற்பாடுகளை பார்வையிட்டதன் பின்னர் மீண்டும் நீதிமன்றிற்கு வருகை தந்து அந்த வழக்கிற்கான புதிய திருத்தப்பட்ட கட்டளையினை நீதிபதி பிறப்பித்துள்ளார்.

முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் வழங்கிய திருத்திய கட்டளையிலே தொல்லியற் சின்னங்கள் பாதுகாப்பதாக கூறி தொல்லியற் சின்னங்கள் மூடிமறைக்கப்பட்டு புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 14 ஆம் திகதி கட்டளையில் புதிய விகாரைகள் மற்றும் கட்டடங்கள் நீக்கப்பட வேண்டும் என்ற கட்டளையின்படி, அவற்றை நீக்கும் போது தொல்லியற் சின்னங்களும் நீக்கப்படும் என்பதால் தொல்லியற் சின்னங்களை பாதுகாக்க வேண்டிய நிலை காணப்படுவதால் புதிய விகாரைகள் கட்டடங்கள் நீக்கப்படவேண்டும் என்ற கட்டளை கை வாங்கப்படுகின்றதெனவும் தொல்லியற் திணைக்களம் (12) இல் இருந்தது போலவே அந்த பிரதேசத்தை பாதுகாக்க வேண்டும் எனவும் கட்டளை விடுக்கப்பட்டுள்ளது.