சட்டவிரோதமாக வெளிநாடு செல்லமுயன்ற 33 பேர் நீர்கொழும்பில் கைது

93 0

சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக நாட்டிலிருந்து வெளியேற முயற்சித்த மேலும் 33 பேரை இலங்கை கடற்படையினர் இன்று (21) கைது செய்துள்ளனர்.

இன்று வியாழக்கிழமை காலை நீர்கொழும்பு கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் ; போது மீன்பிடி படகு ஒன்றுடன் குறித்த குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர் .

சட்டவிரோத குடியேற்றம் மற்றும் பிற சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் இலங்கை கடற்படையானது நாட்டைச் சுற்றியுள்ள கடல் மற்றும் கரையோரப் பகுதிகளை உள்ளடக்கிய வழக்கமான நடவடிக்கைகளையும் ரோந்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, 33 பேர் கொண்ட இந்த குழுவை ஏற்றிச் சென்ற சந்தேகத்திற்கிடமான உள்ளூர் மீன்பிடி இழுவை படகு ஒன்றை, இலங்கை கடற்படைக் கப்பல் இன்று காலை நீர்கொழும்பில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக நாட்டிலிருந்து வெளியேற முயற்சித்த குழுவினரை மடக்கிப்பிடித்துக் கைது செய்தனர்.

இந்த சட்டவிரோத செயலுக்கு பயன்படுத்தப்பட்ட மீன்பிடி இழுவை படகும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் 04 கடத்தல்காரர்கள், 09 பெண்கள் மற்றும் 05 சிறுவர்கள் உட்பட 19 ஆண்கள் அடங்குவர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட 18 வயது முதல் 65 வயதுகளையுடைய சிலாபம், மாரவில, திருகோணமலை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொழும்பு துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.