பயங்கரவாத தடை சட்டத்தை அமுல்படுத்த அரசாங்கம் முயற்சி – அநுரகுமார திஸாநாயக்க |

233 0

மக்களின் போராட்டங்களை அடக்குமுறைகளின் ஊடாக முடக்குவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது. இந்த நிலைமைக்கு மத்தியில் பயங்கரவாத தடை சட்டத்தை அமுல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாகவும் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் (ஜே.வி.பி.) அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் இன்று புதன்கிழமை அவசரகால சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து வெளியிட்ட விசேட அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போது சிந்தித்து செயற்படாவிட்டால் பாரிய அழிவை நோக்கிச் செல்ல வேண்டியேற்படும். தற்போது நாம் அழிவின் விளிம்பிலேயே இருக்கின்றோம். காரணம் இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவி விலகலை அறிவிப்பார் என்று சபாநாயகர் கடந்த 9 ஆம் திகதி அறிவித்திருந்தார். எனினும் இதுவரையில் (இன்று நண்பகல் வரை) அதற்கான எந்தவொரு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை.

மாறாக பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் ஊடாக தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அரசாங்கம் அடக்குமுறைகளினால் மக்களின் போராட்டங்களைக் கட்டுப்படுத்த முயற்சிக்கின்றது.

அத்தோடு நாடளாவிய ரீதியில் அவசரகால சட்டத்தையும் , மேல் மாகாணத்தில் ஊரடங்கினையும் அமுல்படுத்துமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டிருக்கின்றார். இதற்கு மத்தியில் பயங்கரவாத தடை சட்டத்தை அமுல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாகவும் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இது தவறானதொரு செயற்பாடாகும்.

நாட்டில் தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு அமைதியான முறையில் தீர்வுகளை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனை விடுத்து அடக்குமுறைகளின் ஊடாக போராட்டங்களை முடக்குவதற்கு முயற்சித்தால் அது பாரிய அழிவினையே ஏற்படுத்தும்.

எனவே மக்களின் குரலை செவிமடுத்து அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுமாறு வலியுறுத்துகின்றோம். பாதுகாப்பு தரப்பினரையும் மக்களுக்கு சார்பாக செயற்படுமாறு கோருகின்றோம் என்றார்.