வெளிநாடுகளிலும் வேலை செய்ய அரச ஊழியர்களுக்கு சந்தர்ப்பம்!

120 0

அரசு ஊழியர்களுக்கு சேவை காலம் மற்றும் ஓய்வூதியத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளில் கடமையாற்ற, சம்பளம் இல்லாத விடுமுறையை பெற்றுக்கொள்ள முடியும் என்று பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே. மாயாதுன்ன தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர். இந்த வேலைத்திட்டமானது அரசாங்க உத்தியோகத்தர்களை வெளிநாடுகளில் பணியமர்த்துவதற்காக வடிவமைக்கப்படதல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஓர் அரச உத்தியோகத்தர் வெளிநாட்டில் பணிபுரிய விரும்பினால், வேலை வாய்ப்புகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய சுற்றறிக்கையின் விதிகளின்படி, அரச ஊழியர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதற்கும், வெளிநாட்டில் பணியாற்றுவதற்குத் தேவையான திறன்களை வளர்ப்பதற்குத் அவசியமான உள்நாட்டு பயிற்சிகளுக்கும் சம்பளம் இல்லாத விடுமுறை எடுக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, தகுதிகாண் காலத்தை பூர்த்தி செய்யாத உத்தியோகத்தர்களும் வெளிநாட்டில் பணிபுரிந்து நாடு திரும்பிய பின்னர் தங்களின் தகுதிகாண் காலத்தை நிறைவு செய்யும் வாய்ப்பு கிடைக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.