அ.தி.மு.க.வில் இருந்து புதுச்சேரி கண்ணன் விலகல்

304 0

அ.தி.மு.க.வில் இருந்து முன்னாள் அமைச்சர் கண்ணன் விலகினார். இதையொட்டி கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் தேர்தல் பிரிவு செயலாளர் பதவியை ராஜினாமா செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.

புதுவை முன்னாள் அமைச்சரான கண்ணன் காங்கிரஸ் கட்சி சார்பில் மேல்சபை எம்.பி.யாக (2009-2015) இருந்துள்ளார். அப்போது கட்சி நிர்வாகிகளுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். மறைந்த தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் அவர் அ.தி.மு.க.வில் இணைந்தார். அவருக்கு தேர்தல் பிரிவு செயலாளர் பதவியும் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் கட்சி தொடர்பான செயல்பாடுகளில் அவர் ஈடுபாடு இல்லாமல் இருந்து வந்தார். சமீபத்தில் நடந்த நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலின் போதும் அவர் தேர்தல் பணியாற்றாமல் ஒதுங்கியே இருந்து வந்தார். அ.தி.மு.க.வில் இருந்து அவர் எப்போது வேண்டுமானாலும் வெளியேறலாம் என்று கூறப்பட்டு வந்தது.

இதற்கிடையே தமிழகத்தில் அ.தி.மு.க.வில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நடந்து வருகின்றன. இத்தகைய சூழ்நிலையில் அ.தி.மு.க.வில் இருந்து விலகுவதாக கண்ணன் நேற்று தெரிவித்தார். இதையொட்டி கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் தேர்தல் பிரிவு செயலாளர் பதவியை ராஜினாமா செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, ‘அ.தி.மு.க.வை விட்டு நான் வெளியேறுவது அனைவருக்கும் தெரிந்த வெளிப்படையான விஷயம்தான். இதுதொடர்பாக நான் மேற்கொண்டு எதுவும் சொல்வதற்கில்லை’ என்றார்.