அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிற்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு

110 0

பிரசன்ன ரணதுங்கவிற்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

‘உயிர்த்தெழுதல் – நீதியின் மக்கள்’ அமைப்பின் பிரதிநிதிகள் பங்கேற்புடன் இன்று காலை 11 மணிக்கு இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அண்மையில் மகா சங்கத்தினருக்கு எதிராக முன்வைத்த குற்றச்சாட்டை உடனடியாக விசாரணை செய்யுமாறு இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் கடந்த மே 9ஆம் திகதி இடம்பெற்ற கலவரத்திற்கு பின்னால் பௌத்த விகாரைகளும் கிறிஸ்தவ ஆலயங்களுமே இருந்ததாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அண்மையில் தெரிவித்திருந்தார்.

சம்பவ தினத்தன்று சோபித தேரர், கர்தினால் ஆகியோர் அங்கிருந்து கொண்டு இவர்களை தாக்குங்கள் என்றே தெரிவித்ததாகவும், சில ஆலயங்களில் மணி ஒலிக்கச் செய்து மக்களை ஒன்று திரட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியிருந்தார்.

அத்துடன், இந்த தாக்குதலின் பின்னணியில் விகாரைகள் மாத்திரம் அல்ல, கிறிஸ்தவ ஆலயங்களும் இருக்கின்றன.

நான் இவ்வாறு தெரிவிப்பதால் எனக்கு எதிராக செயற்படுவார்கள். அது தொடர்பில் நான் அச்சப்படவில்லை எனவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டிருந்தார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.