அமரகீர்த்தி கொலை தொடர்பில் மேலும் ஒருவர் கைது

160 0

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாவலர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் நேற்று (07) நிட்டம்புவ பொலிஸாருக்கு அழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக கடந்த 6ஆம் திகதியும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் நிட்டம்புவ மற்றும் கலகெடிஹேன பிரதேசங்களில் வசிப்பவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் மூவரும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதுடன் இருவர் எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரை 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களில் 27 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கடந்த மே மாதம் 09 ஆம் திகதி ஹோமாகமவில் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம மற்றும் அவரது பாதுகாவலரை தாக்கி அவர் பயணித்த வாகனத்திற்கு தீ வைத்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் நாளை (09) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கடந்த மே 09ஆம் திகதி நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற கலவரம் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் 39 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் 12 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.