அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் யேர்மனியில் நடாத்தப்பட்ட அனைத்துலகப் பொதுத்தேர்வு 2021,2022

998 0

ஓரிரு மாதங்களாக எமது அன்றாட வாழ்க்கை மீண்டும் ஒரு சுமுகமான நிலைக்கு மாறியமை நாம் அனைவரும் அறிந்ததே. தமிழ்ச் சிறார்களின் தமிழ்க்கல்வியை வளர்க்க வேண்டும் என்ற ஆழ்ந்த சிந்தனையோடு 110க்கும் மேற்பட்ட தமிழாலயங்களை ஒருங்கிணைத்துச் செயலாற்றிக் கொண்டிருக்கும் தமிழ்க் கல்விக் கழகம் – யேர்மனி, இக்கல்வியாண்டில் அனைத்துலகப் பொதுத்தேர்வை மீண்டும் இயல்புநிலையில் நடாத்தக்கூடியதாக இருந்தது. இத்தேர்வு மிகவும் கவனமாகவும் கண்ணியத்துடனும் நேர்மையுடனும் 04.06.2022 சனிக்கிழமை நிறைவேற்றப்பட்டது. சென்ற ஆண்டு மின்னியற் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, தமிழ்க்கல்வியூட்டும் நிலை ஏற்பட்டிருந்த போதிலும் அனைத்துத் தமிழாலயங்களும் இன்று வழமையான இயங்குநிலையை அடைந்துள்ளன என்பது மிகவும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இவ்வனைத்துலகப் பொதுத்தேர்வு நாடுதழுவிய மட்டத்தில் 74 தேர்வு நிலையங்களில் நடைபெற்று நிறைவுற்றுள்ளது. ஒவ்வொரு நிலையத்திற்கும் ஒவ்வொரு பிரதம மேற்பார்வையாளரும் அவருடன் இணைந்து பணியாற்ற சராசரி நான்கு தொடக்கம் ஏழு துணைமேற்பார்வையாளர்கள் என்ற அடிப்படையில் ஏறத்தாழ 400க்கும் மேற்பட்ட ஆசிரியப்பெருந்தகைகள் தமிழ்க் கல்விக் கழகத்தின் விதிமுறைகளுக்கேற்ப கடமையுணர்வோடும் தமிழை வளர்க்கும் நல்லெண்ணத்தோடும் இப்பணியில் ஈடுபட்டனர். பெரும்பாலான தமிழாலயங்கள் தனியாகவும் சில தமிழாலயங்கள் இணைந்தும் தேர்வு நிலையங்களை அமைத்திருந்தன.

காலை 8:45 மணி தொடக்கம் அனைத்து மாணவர்களும் தமிழாலயச் சீருடையை அணிந்தவாறு தங்கள் பெற்றோர்களுடன் தேர்வுமண்டபத்தை நோக்கி வருகைதரத் தொடங்கினார்கள். காலை 9:15 மணிக்கு தொடக்க நிகழ்வுகளுடன் தொடங்கப்பட்ட அனைத்துலகப் பொதுத்தேர்வு, 9:30 மணிக்கு தேர்வாளர்கள் அனைவரையும் தேர்வு மண்டபத்தில் அமர்த்திச் சரியாக 10:00 மணிக்குத் தேர்வு தொடங்கப்பட்டது.

அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் நேர அட்டவணைக்கேற்ப ஆண்டு 1 தொடக்கம் 3 வரை 11:30 மணிக்கும் ஆண்டு 4 தொடக்கம் 6 வரை 12:00 மணிக்கும் ஆண்டு 7 தொடக்கம் 10 வரை 12:30 மணிக்கும் ஏனைய வகுப்புநிலைகளுக்கு 13:00 மணிக்கும் தேர்வு நிறைவேறியது. தாம் கற்றவற்றை மிக ஆவலுடன் சிறப்புறத் தேர்வெழுதிய மாணவர்கள், தேர்வு நிறைவடைந்த பின் தங்கள் கருத்துகளை பெற்றோர்களுடனும் சகமாணவர்களுடனும் தங்களுக்குக் கற்பித்த ஆசிரியர்களுடனும் பரிமாறி மகிழ்ந்ததையும் நீண்ட காலத்துக்குப் பின்பு பெற்றோர்களும் ஒருவரை ஒருவர் சந்தித்து உறவாடி இன்பம் அடைந்ததையும் காணக்கூடியதாக இருந்தது.