வவுனியாவில் திருட்டுச் சம்பவங்களில் ஈடுப்பட்ட மூன்று இளைஞர்கள் கைது

137 0

வவுனியாவில் 9 இடங்களில் இடம்பெற்ற பல்வேறு திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் இன்று (04) தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம் வவுனியாவின் உக்குளாங்குளம் பகுதியில் 4 வீடுகளிலும், பண்டாரிக்குளம் பகுதியில் 2 வீடுகளிலும், நெளுக்குளம் பகுதியில் ஒரு வீட்டிலும், கூமாங்குளம் பகுதியில் ஒரு வீட்டிலும், மகாறம்பைக்குளம் பகுதியில் ஒரு வீட்டிலும் என 9 இடங்களில் நகைகள், மோட்டர் சைக்கிள், துவிச்சக்கரவண்டி, இலத்திரனியல் உபகரணங்கள் திருடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த முறைப்பாட்டுக்கு அமைவாக ; வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜே.ஏ.எஸ்.ஜெயக்கொடி அவர்களின் வழிகாட்டலில், வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பரிசோதகர் கியான் தலைமையிலான பொலிஸ் குழுவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது குறித்த சம்பவம் தொடர்பில் மதவுவைத்தகுளம் (32 வயது), தேக்கவத்தை (வயது 30), 4ம் கட்டை (வயது 35) ஆகிய இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது அவர்களிடம் இருந்து மோட்டர்கள் 3, சிலிண்டர்கள் 8, ஜெனரேற்றர், தொலைக்காட்சி, கிறண்டர், சைக்கிள், மோட்டர் சைக்கிள் மற்றும் தோடு, மூக்குத்தி சஙகிலி அடங்கிய 2 பவுண் நகைகள் என்பன மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளின் பின் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.