இலங்கையிலுள்ள பிலிப்பைன்ஸ் பிரஜைகளை உடனடியாக அழைத்துச்செல்ல அந்நாட்டு அரசாங்கம் தீர்மானம்

242 0

நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில், இலங்கையிலுள்ள பிலிப்பைன்ஸ் பிரஜைகள் அனைவரையும் மீண்டும் அந்நாட்டிற்கு உடனடியாக அழைத்துச்செல்வதற்கு பிலிப்பைன்ஸ் அரசாங்கம் உத்தரவு பிறப்பித்திருக்கின்றது.,

அவர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்துவாருங்கள். எம்மிடம் பணம் உள்ளது’ என்று தெரிவித்துள்ள பிலிப்பைன்ஸ் வெளிவிவகார செயலாளர் ரியோடோரோ லொக்ஸின், இலங்கையிலுள்ள பிலிப்பைன்ஸ் பிரஜைகளை மீண்டும் தமது நாட்டிற்கு அழைத்துவருவதற்கான உத்தரவை நேற்று  ஞாயிற்றுக்கிழமை பிறப்பித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மீண்டும் நாட்டிற்குத் திரும்புவதற்கான கோரிக்கையை முன்வைத்த பிலிப்பைன்ஸ் பிரஜைகளை மேற்கோள் காண்பித்து வெளிவிவகார செயலாளர் ரியோடோரோ லொக்ஸின் மேற்படி கருத்தை வெளியிட்டுள்ளார்.

டாக்கா நகரிலுள்ள பிலிப்பைன்ஸ் தூதரகம் மற்றும் கொழும்பிலுள்ள பிலிப்பைன்ஸ் கொன்சியூலர் அலுவலகம் ஆகியவற்றின் ஊடாக இலங்கையின் பொருளாதார நிலைவரம் குறித்து உன்னிப்பாக அவதானித்துவருவதாக வெளிவிவகார துணைச்செயலாளர் சாரா லூ அரியோலா தெரிவித்துள்ளார்.

அதுமாத்திரமன்றி இலங்கையிலுள்ள பிலிப்பைன்ஸ் பிரஜைகளுடன் அவர்கள் தொடர்பைப் பேணுவதுடன், அவர்களது நிலைவரம் குறித்து ஆராய்ந்து வருவதாகவும் சாரா லூ அரியோலா மேலும் தெரிவித்துள்ளார்.

அதன்படி இலங்கையிலுள்ள பிலிப்பைன்ஸ் பிரஜைகள் எவரேனும் மீண்டும் தமது நாட்டிற்குச்செல்ல விரும்பினால் +94 114322267, +94 114322268, +94 112307162 ஆகிய தொலைபேசி இலக்கங்களின் ஊடாகவோ philcon.cmb@cotrop.net  அல்லது philcon1.cmb@cotrop.net என்ற மின்னஞ்சல் முகவரியின் ஊடாகவோ கொழும்பிலுள்ள பிலிப்பைன்ஸ் கொன்சியூலர் அலுவலகத்தைத் தொடர்புகொள்ளமுடியும்.

அவ்வாறில்லாவிட்டால்  +88 01735349427 என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலமோ அல்லது dhaka.pe@dfa.gov.ph என்ற மின்னஞ்சல் முகவரியின் மூலமோ டாக்கா நகரிலுள்ள பிலிப்பைன்ஸ் தூதரகத்தைத் தொடர்புகொள்ளமுடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.