கர்ப்பிணி பெண் கொலை – சாட்சியங்களை விசாரிக்க உத்தரவு

240 0

ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு உள்ள இரண்டு சந்தேகநபர்களும் கொலை நடந்த சமயம் பிறிதொரு இடத்தில் நின்றதாக சந்தேகநபர்கள் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, ‘நகர்த்தல் பத்திரம்’ தாக்கல் செய்யப்பட்டதன் மூலம் குறித்த வழக்கினை, நேற்று ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியால் விசாரணைக்கு எடுத்துக்கொண்டார்.

இதன்போது சந்தேகநபர்கள் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி, சந்தேகநபர்களில் ஒருவர் கொலை நடந்த சமயம் மருதனார்மடத்தில் நின்றதாகவும், மற்றைய நபர் வேலணையில் நின்றதாகவும், அவர் வேலணையில் துவிசக்கரவண்டி விபத்துக்குள்ளாகியதில் இரத்த காயம் ஏற்பட்டதாகவும் அந்த இரத்தக் கரையே அவரது ஆடையில் இருந்ததாகவும், அதற்கான சாட்சியங்கள் உண்டு எனவும், அவற்றை பொலிஸார் விசாரணை செய்ய வேண்டும் எனவும் மன்றில் கோரிக்கை விடுத்தார்.

அதனை ஏற்றுக்கொண்ட நீதவான் சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கூறிய சாட்சியங்களை விசாரணை செய்ய உத்தரவு இட்டார்.

அத்துடன், சந்தேகநபர்களின் அலைபேசி உரையாடல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டார். ஊர்காவற்துறை பகுதியில் கடந்த 24ஆம் திகதி கர்ப்பிணி பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார்.

குறித்த சம்பவம் தொடர்பில் இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் எதிர்வரும் 8ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.