யாழில் பொதுமக்களின் நலன் கருதி செயற்படவுள்ள இரண்டு திட்டங்கள் : பத்மநாதன் மயூரன்

270 0

நாட்டின் பொருளாதார மந்த நிலையை கருத்திற்கொண்டு நல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் வசிக்கும் பொதுமக்களின் நலன் கருதி பிரதேச சபையினால் இரண்டு திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளதாக நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர்பத்மநாதன் மயூரன் தெரிவித்துள்ளார்.

நல்லூர் பிரதேச சபையில் இன்று(27) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பொதுமக்களை உணவுப் பஞ்சத்தில் இருந்து பாதுகாக்கவும் வறுமை நிலையிலிருந்து தணிப்பதற்கும் பிரதேச சபையின் நிதிப் பங்களிப்புடன் தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்களின் ஆதரவுடன் இரண்டு வேலைத் திட்டங்களும் மேற்கொள்ளப்படவுள்ளது.

நல்லூர் பிரதேச சபையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கமைய குறுங்கால வீட்டுத் தோட்டப்பயிர் செய்கையை ஊக்குவிக்கும் முகமாகவட்டார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலகத்தின் ஊடாக பெறப்படும் பயனாளிகளுக்கு விதைகள் நாற்றுகள் இயற்கைப் பசளை வழங்கப்பட்டு அதற்கான வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளது.

மேலும் சனசமூக நிலையங்களை தயார்ப்படுத்தி உணவுப் பஞ்சம் பற்றாக்குறையில் இருக்கும் குடும்பங்களுக்கு உடனடியாக உணவுப் பொதிகளை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

யாழில் பொதுமக்களின் நலன் கருதி செயற்படவுள்ள இரண்டு திட்டங்கள் : பத்மநாதன் மயூரன்

காணி வசதியுள்ளவர்கள் கண்டிப்பாக வீட்டுத் தோட்டங்களை உருவாக்கி மேம்படுத்தவேண்டும். அவர்களுக்கு எந்த உதவிகளையும் நல்லூர் பிரதேச சபை மேற் கொள்வதற்கு தயாராக உள்ளது. எம்முடன் இணைந்து தனியார் தொண்டு நிறுவனங்கள் தயாராக உள்ளன” என மேலும் தெரிவித்துள்ளார்.